தூத்துக்குடி மாவட்டம் கீரனூர் பகுதியில் உள்ள மிகப்பெரிய குளத்தை தூர்வாரும் பணி தொடங்கியது : ஏராளமான மக்களும் பங்கேற்பு
Apr 30 2017 3:46PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தூத்துக்குடி மாவட்டம் கீரனூர் பகுதியில் உள்ள மிகப்பெரிய குளத்தை தூர்வாரும் பணி தொடங்கியுள்ளது. இதில் அப்பகுதி மக்களும் நூற்றுக்கணக்கில் பங்கேற்று இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகம் முழுவதும் நீர்நிலைகள் மற்றும் கால்வாய்களை தூர்வாரும் பணி தொடர்ந்து முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. அரசு மேற்கொண்ட முயற்சியைஅடுத்து பொதுமக்கள், தன்னார்வலர்கள் மற்றும் சமூக அக்கறை கொண்ட பலரும் இந்தப் பணியில் தங்களை ஈடுபடுத்தி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் கீரனூரில் சுமார்ர் 100 ஏக்கர் பரப்பளவில் மிகப்பெரிய குளம் அமைந்துள்ளது. கடந்த பல வருடங்களாக இந்தக் குளம் தூர்வாரப்படாமல் தூர்ந்து காணப்பட்டதால், அதனை தூர்வாரி ஆழப்படுத்த மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது. இந்தப் பணி நேற்று தொடங்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் திரு. ரவிக்குமார் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பணிகளை தொடங்கி வைத்தார். கீரனூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் பலரும் இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் வருவாய்த்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் 32 குளங்கள் தூர்வாரப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
இதனிடையே, நாகை மாவட்டம் காவிரி வடிநிலக்கோட்டம் சார்பில், தலைஞாயிறு வாய்க்கால், மணக்குடி வாய்க்கால் தலைப்பு, முத்தப்பன்காவிரி வாய்க்கால், மதகுகள் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக நாகை மாவட்டத்தில் 4 ஆயிரம் ஏக்கர் பாசன நிலங்களுக்கு தண்ணீர் தட்டுப்பாடின்றி கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. விவசாயிகள் பங்களிப்புடன் நடைபெறும் இப்பணிகளை சட்டமன்ற உறுப்பினர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.