தமிழக அரசு உத்தரவுப்படி, மாநிலம் முழுவதும், மாணவ - மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள், ஏழை - எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன. வளர்ச்சித் திட்டப்பணிகளும் முழுவீச்சில் செயல்படுத்தப்படுகின்றன.
நாமக்கல் மாவட்டம் மாவட்டம் மண்டகபாளையம் ஊராட்சியில் 2 கோடியே 47 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ள புதிய ஊராட்சி சேவை மைய கட்டடங்கள், அங்கன்வாடி கட்டடங்கள், சமையல்கூட கட்டடம், சமுதாய நலக் கூடம் ஆகியவற்றை அமைச்சர் திரு. பி. தங்கமணி திறந்து வைத்தார். மேலும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில், 2 கோடியே, 13 லட்சத்து, 59 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான புதிய சார் சாலை அமைக்கும் பணி உள்ளிட்ட பல்வேறு புதிய திடப்பணிகளையும் அமைச்சர் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் திருமதி. பொன். சரஸ்வதி, மாவட்ட ஆட்சியர் திருமதி. மு. ஆசியா மரியம் மற்றும் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆயிரத்து 420 பெண்களுக்கு ஆறு கோடியே 12 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நிதியுதவியும், திருமாங்கல்யத்திற்காக 5 ஆயிரத்து 680 கிராம் தங்கமும் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. விஜயகுமார், மாவட்ட ஆட்சியர் திரு. சஜ்ஜன் சிங் சவான் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
திருவாரூர் மாவட்டம் பருத்தியூர் கிராமத்தில் 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 50 பயனாளிகளுக்கு கறவை பசுக்கள் வழங்கப்பட்டன.
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள சதக் அப்துல்லா அப்பா கல்லூரியில், 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள, விளையாட்டு அரங்கத்தை, நாடாளுமன்ற உறுப்பினர் திரு. எஸ். முத்துகருப்பன் மற்றும் மாவட்ட ஆட்சியர் திரு. கருணாகரன் ஆகியோர் திறந்து வைத்தனர்.
இதேபோல், தென்காசி காசிவிஸ்வநாதர் கோயில் அருகே ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள, ஆழ்துளை கிணற்றுடன் கூடிய சின்டெக்ஸ் தொட்டி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு வட்டாட்ச்சியர் அலுவலகத்தில் 150 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா மற்றும் புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டன. அதனைதொடர்ந்து 344 பயனாளிகளுக்கு 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. திருத்தணி கோ.அரி, மாவட்ட ஆட்சியர் திருமதி. சுந்தரவல்லி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் 444 பள்ளி மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் திரு. சாந்திராமு உட்பட பலர் கலந்து கொண்டனர்.