டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதியில் மாண்புமிகு அம்மா ஆசியோடும், கழகப் பொதுச் செயலாளர் சின்னம்மா வாழ்த்துக்களோடும் போட்டியிடும், கழக துணைப் பொதுச் செயலாளர் திரு. TTV தினகரன், 3-வது நாளாக இன்று, தொகுதியின் பல்வேறு பகுதிகளிலும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் அம்மா ஆசியுடனும், கழகப் பொதுச் செயலாளர் சின்னம்மா வாழ்த்துகளோடும் "அ.இ.அ.தி.மு.க. அம்மா" சார்பில் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும், கழக துணைப் பொதுச் செயலாளர் திரு. TTV தினகரன், நேற்று முன்தினம் வேட்பு மனு தாக்கல் செய்து உடனடியாக தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார். இன்று 3-வது நாளாக தொடர்ந்து அவர் பிரச்சாரம் மேற்கொண்டு தொப்பி சின்னத்திற்கு பேராதரவு திரட்டி வருகிறார்.
ஆர்.கே. நகர் தொகுதியின் புது வண்ணாரப்பேட்டை, திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள அருள்மிகு ஜலகண்டேஸ்வரர் திருக்கோயிலில் இன்று மாலை, திரு. TTV தினகரன், பிரார்த்தனை நடத்தி, தனது 3-வது நாள் பிரச்சாரத்தை தொடங்கினார். தேர்தல் பிரச்சாரத்தின்போது, செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், வரும் 27ம் தேதி, ஆர்.கே. நகர் தொகுதி தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் என்று தெரிவித்தார்.
செல்லும் இடமெல்லாம் திரு. TTV தினகரனுக்கு, பொதுமக்கள், கழகத் தொண்டர்கள் ஆகியோர், மேளதாளங்கள் உள்ளிட்ட இசைக்கருவிகள் முழங்க உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர். பெண்கள் ஆரத்தி எடுத்தும், பூரண கும்ப மரியாதை அளித்தும், தங்கள் வாக்கு 'தொப்பி' சின்னத்திற்கே என எழுச்சி முழக்கமிட்டு வருகின்றனர். பல இடங்களில், வீடுகளின் மாடியில் இருந்து மலர்தூவி பொதுமக்கள் வரவேற்றனர்.
ஆர்.கே. நகர் தொகுதியில், திருவொற்றியூர் நெடுஞ்சாலை, வீரராகவன் சாலை, பங்களா தெரு, செரியன் நகர், தேசிய நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீதி வீதியாகச் சென்று திரு. TTV தினகரன் பேராதரவு திரட்டினார். பல்லாயிரக்கணக்கில் திரண்டிருந்த மக்களிடையே உரையாற்றிய திரு. TTV தினகரன், அ.இ.அ.தி.மு.க.வின் வெற்றிச் சின்னமாம் இரட்டை இலை சின்னம் உறுதியாக மீட்கப்படும் என தெரிவித்தார்.
கோவிந்தராஜுலு தெரு, தனபால் நகர், கண்ணுதெரு, பொன்னுசாமி நகர் உள்ளிட்ட இடங்களில், திரு. TTV தினகரன் நடந்து சென்று, பொதுமக்களை சந்தித்து, 'தொப்பி' சின்னத்திற்கு வாக்களித்து, பல்லாயிரக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் தன்னை வெற்றிபெறச் செய்யவேண்டும் என கேட்டுக்கொண்டார். பிரச்சாரத்தின்போது, அனைத்துப் பகுதிகளிலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடி, உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.