சென்னையில், நேரு பூங்கா முதல், கோயம்பேடு வரையிலான மெட்ரோ வழித்தடத்தில் ஓரிரு மாதங்களில் சுரங்கப் பாதையில் ரயில் சேவை தொடங்கும் : மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல்
Feb 25 2017 12:17PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னையில், நேரு பூங்கா முதல், கோயம்பேடு வரையிலான மெட்ரோ வழித்தடத்தில், ஓரிரு மாதங்களில் சுரங்கப் பாதையில் ரயில் சேவை தொடங்கும் என, மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னையில் மெட்ரோ ரயில் திட்டம் 2 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. வண்ணாரப்பேட்டையிலிருந்து விமான நிலையம் வரை ஒரு வழித்தடத்திலும், சென்ட்ரல் முதல், பரங்கிமலை வரை ஒரு வழித்தடத்திலும் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
மொத்தம் 45 கிலோ மீட்டர் தூரமுள்ள இத்திட்டத்தில், உயர்மட்டப் பாதையிலும், சுரங்கப் பாதையிலும் மெட்ரோ ரயில் இயக்கப்படும். முதல்கட்டமாக, உயர்மட்டப் பாதையில் தற்போது மெட்ரோ ரயில் சேவை வழங்கப்படுகிறது.
சுரங்கப்பாதையில் பல்வேறு கட்டங்களாக பணிகள் நடைபெற்று வருகின்றன. அனைத்துப் பணிகளும் நிறைவு பெற்று, அடுத்த ஆண்டில் மெட்ரோ ரயில் சேவை முழுமை அடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த மெட்ரோ ரயில் முதன்மை பொதுமேலாளர், சுரங்கப்பாதைப் பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ள நிலையில், ஓரிரு மாதங்களில் நேரு பூங்கா முதல், கோயம்பேடு வரையிலான வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கும் என தெரிவித்தார். மேலும், 8 சுரங்கப்பாதைகள் இணைக்கப்பட உள்ள சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையம், மெட்ரோ ரயில் சந்திப்பு நிலையமாக செயல்படும் என்றும் அவர் தெரிவித்தார்.