தமிழக அரசின் உயர்மட்ட விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு ஊக்க உதவித்தொகை திட்டத்தின்கீழ் வாள் சண்டை வீராங்கனையான C.A. பவானி தேவிக்கு செலவினத் தொகையாக 5 லட்சத்து 43 ஆயிரம் ரூபாயை முதலமைச்சர் வழங்கினார்
Feb 24 2017 2:39PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழக அரசின் உயர்மட்ட விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு ஊக்க உதவித்தொகை திட்டத்தின்கீழ், வாள் சண்டை வீராங்கனையான செல்வி C.A. பவானி தேவிக்கு, செலவினத் தொகையாக 5 லட்சத்து 43 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் அம்மாவின் அறிவிப்பின்படி உயர்மட்ட விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு ஊக்க உதவித்தொகை திட்டம் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் அடிப்படையில், திறமைமிக்க விளையாட்டு வீரர்-வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டு உரிய பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
அதனடிப்படையில், வாள் சண்டை வீராங்கனையான செல்வி சி.ஏ. பவானிதேவி, கடந்த ஆண்டு பிரான்சில் நடைபெற்ற உலகக் கோப்பை வாள் சண்டைப் போட்டியில் கலந்து கொண்டமைக்காகவும், மெக்ஸிகோ நாட்டில் நடைபெற்ற வாள் சண்டை கிராண்ட் ப்ரி போட்டியில் பங்கேற்றமைக்காகவும் செலவினத் தொகையாக 5 லட்சத்து 43 ஆயிரத்து 386 ரூபாய்க்கான காசோலையை மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மாவின் 69-வது பிறந்த நாளான இன்று, முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிச்சாமி, செல்வி சி.ஏ. பவானிதேவியின் தாயாரிடம் வழங்கினார்.
இந்தச் நிகழ்ச்சியில், பள்ளிக் கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத் துறை அமைச்சர் திரு. கே.ஏ. செங்கோட்டையன், சட்டமன்ற உறுப்பினர் திரு. பி. வெற்றிவேல், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ராஜேந்திர குமார், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய முதன்மைச் செயலாளர் மற்றும் உறுப்பினர் செயலர் திரு. அஷோக் டோங்ரே மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.