இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மாவின் 69-வது பிறந்த நாளான இன்று, சென்னையில் உள்ள அ.இ.அ.தி.மு.க. தலைமைக்கழக வளாகத்தில், மாண்புமிகு அம்மாவின் திருவுருவப் படத்திற்கு, கழக அவைத் தலைவர் திரு. கே.ஏ. செங்கோட்டையன் தலைமையில், தலைமைக்கழக நிர்வாகிகளும், அமைச்சர்களும் மலர்தூவி மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியின்போது, புரட்சித் தலைவி அம்மாவின் பிறந்தநாள் விழா சிறப்பு மலரும் வெளியிடப்பட்டது.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளராகவும், தமிழ்நாடு முதலமைச்சராகவும் தமது வாழ்நாளை மக்களுக்காகவே அர்ப்பணித்து தவ வாழ்வு வாழ்ந்து மறைந்த "மக்கள் தலைவி" இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மாவின் 69-வது பிறந்தநாளான இன்று, காலை 10 மணிக்கு, சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலை தலைமைக்கழக வளாகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மாவின் திருவுருவப் படத்திற்கு, கழக அவைத் தலைவரும், பள்ளிக் கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சருமான திரு. கே.ஏ. செங்கோட்டையன் தலைமையில், கழக துணைப் பொதுச் செயலாளர் திரு. T.T.V. தினகரன் மற்றும் தலைமைக்கழக நிர்வாகிகளும், அமைச்சர் பெருமக்களும் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
அதனைத் தொடர்ந்து, புரட்சி தலைவி அம்மாவின் பிறந்த நாளை முன்னிட்டு தயார் செய்யப்பட்டிருந்த சிறப்பு மலரை, கழகப் பொருளாளரும், வனத்துறை அமைச்சருமான திரு. திண்டுக்கல் சி. சீனிவாசன் வெளியிட, கழக தேர்தல் பிரிவுச் செயலாளரும், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை துணைத் தலைவருமான திரு. பொள்ளாச்சி வி. ஜெயராமன் பெற்றுக் கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில், கழகம், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மன்றம், புரட்சித் தலைவி அம்மா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப்பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்புசாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை மற்றும் தகவல் தொழில்நுட்பப் பிரிவு உட்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், கழக உடன் பிறப்புகளும், பொதுமக்களும் பெருந்திரளாக கலந்துகொண்டனர்.