தமிழ் மக்களின் பாரம்பரிய பண்பாட்டுச் சின்னமாகத் திகழும் "ஜல்லிக்கட்டு" நிகழ்ச்சியை நடத்த ஏதுவாக, அவசரச் சட்டம் ஒன்றை, மத்திய அரசு உடனடியாக பிறப்பிக்க வேண்டும் என முதலமைச்சர் திரு. ஓ. பன்னீர் செல்வம் டெல்லியில் நேற்று, பிரதமர் திரு. நரேந்திர மோடியிடம் நேரில் வலியுறுத்தினார். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகத்தில் வலுத்து வரும் போராட்டம் குறித்தும், இளைஞர்களின் எழுச்சி பற்றியும் பிரதமரிடம் முதலமைச்சர் விளக்கமாக எடுத்துரைத்தார். ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழக அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு, மத்திய அரசு உறுதுணையாக இருக்கும் என பிரதமர் தெரிவித்துள்ளார்.
தி.மு.க அங்கம் வகித்த, முந்தைய மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு, காட்சிப் படுத்தக்கூடாத விலங்குகள் பட்டியலில் காளைகளைச் சேர்த்தது. இதன்விளைவாக, ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கும் நிலைமை ஏற்பட்டது. இந்த தடையை நீக்கக்கோரி மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் அம்மா, தொடர்ந்து போராடியதோடு, சட்டப்பூர்வமான நடவடிக்கைகளையும் மேற்கொண்டார். தமிழகத்தின் பாரம்பரிய வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை நடத்த ஏதுவாக, மத்திய அரசு, அவசரச் சட்டம் கொண்டுவர வேண்டும் என்றும் வலியுறுத்தி வந்தார்.
மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் அம்மாவின் வழியில் சிறப்பாகச் செயல்படும், அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சின்னம்மா, ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கும் வகையில், அவசரச் சட்டம் ஒன்றை உடனடியாக பிறப்பிக்க வலியுறுத்தி, பிரதமர் திரு. நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதினார். இந்தப் பிரச்னையில் மறைந்த மாண்புமிகு முதலமைச்சர் அம்மாவின் கடிதங்கள், கோரிக்கைகள், நீதிமன்ற முன்னெடுப்புகள் உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் கருத்தில் கொண்டு, மத்திய பாரதிய ஜனதா அரசு, உரிய நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என சின்னம்மா அறிக்கை வாயிலாகவும் கேட்டுக் கொண்டார்.
இதனைத்தொடர்ந்து, முதலமைச்சர் திரு. ஓ. பன்னீர்செல்வம், டெல்லி சென்று, பிரதமர் திரு. நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து, ஜல்லிக்கட்டு தொடர்பாக, தமிழ் மக்களின் ஒட்டுமொத்த உணர்வுகளை பிரதமரிடம் விளக்கமாக எடுத்துரைத்தார். ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை நடத்த ஏதுவாக, அவசர சட்டம் ஒன்றை உடனடியாக இயற்ற வேண்டும் என்றும் முதலமைச்சர் வலியுறுத்தினார். கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்திற்கு உடனடியாக நிதியுதவி வழங்கிடவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இப்பிரச்சனைகள் தொடர்பாக கோரிக்கை மனுவையும் பிரதமரிடம் முதலமைச்சர் அளித்தார்.
பிரதமரை சந்தித்த பின்னர், டெல்லியில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த முதலமைச்சர் திரு. ஓ. பன்னீர்செல்வம், ஜல்லிக்கட்டு தொடர்பாக, தமிழக மக்களின் ஒட்டுமொத்த உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதாக பிரதமர் தெரிவித்தார் என்றும், இதுதொடர்பாக தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு, மத்திய அரசு உறுதுணையாக இருக்கும் என்று பிரதமர் உறுதியளித்ததாகவும் தெரிவித்தார்.