தமிழக அரசு உத்தரவுப்படி, மாநிலம் முழுவதும் பள்ளி மாணவ-மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டிகள் மற்றும் ஏழை-எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன. வளர்ச்சித் திட்டப் பணிகளும் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஈரோடு மாவட்டம், பாலக்காட்டூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆயிரத்து 810 பயனாளிகளுக்கு, சுமார் 38 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வீடுகள் கட்டுவதற்கான ஆணைகளை அமைச்சர்கள் திரு. கே.சி. கருப்பண்ணன், திரு. உடுமலை கே. ராதாகிருஷ்ணன் ஆகியோர் வழங்கினர்.
தொடர்ந்து, ஈரோடு மாநகர் பகுதிக்கு உட்பட்ட பெரியாநகர், பெரும்பள்ளம் ஓடை, கருங்கல்பாளையம் பகுதிகளில் 125 கோடியே 89 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஆயிரத்து 72 அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது. இதில், அமைச்சர்கள் பங்கேற்று கட்டுமானப் பணிகளை தொடங்கிவைத்தனர்.
நாகை மாவட்டத்தில், வேதாரண்யம், தலைஞாயிறு, நாகை ஆகிய ஒன்றியங்களைச் சேர்ந்த அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் 2 ஆயிரத்து 258 மாணவ-மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டிகளை அமைச்சர் திரு. ஓ.எஸ். மணியன் வழங்கினார்.
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை பெண்கள்மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 275 மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டிகளை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் வழங்கினார்.
தொடர்ந்து, விராலிமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 614 பயனாளிகளுக்கு கல்வி உதவித் தொகை, திருமண உதவித் தொகை உட்பட 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் அமைச்சர் வழங்கினார். இதனை பெற்றுக்கொண்ட பயனாளிகள், தமிழக அரசுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பேரிகை அரசு அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 340 மாணவ-மாணவியருக்கும், புக்கசாகரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 148 மாணவ-மாணவியருக்கும் விலையில்லா மிதிவண்டிகளைஅமைச்சர் திரு. பாலகிருஷ்ணா ரெட்டி வழங்கினார்.
இதனிடையே, ஈரோடு மாவட்டம் பெருந்துறை தொகுதிக்குட்பட்ட சின்னவீர சங்கிலி, பெரியவீர சங்கிலி, தோரணவாரி, சீனாபுரம், முள்ளம் பட்டி, மூங்கில் பாளையம் ஆகிய பகுதிகளில்50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், குடிநீர் தொட்டி, தார்சாலை, பொது சுகாதார வளாகம் அமைத்தல் உள்ளிட்டவற்றுக்கான பணிகள் பூமிபூஜையுடன் தொடங்கியுள்ளன.