சாலை பாதுகாப்பு வார விழா : தமிழகம் முழுவதும் பள்ளி மாணவ-மாணவியருக்கான கட்டுரை, பேச்சு, ஓவியம் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு போட்டிகள்
Jan 20 2017 9:44AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பள்ளி மாணவ-மாணவியருக்கான கட்டுரை, பேச்சு, ஓவியம் உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
தமிழகத்தில் 28-வது சாலை பாதுகாப்பு வார விழா, கடந்த 17-ம் தேதி முதல் ஒருவாரம் கடைபிடிக்கப்படுகிறது. இதனையொட்டி, பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும், போட்டிகளும் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், கரூரில் சாலைவிதிகளை கடைபிடிப்பதன் அவசியம் குறித்து, பேச்சு, கட்டுரை உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், வெற்றிபெற்ற மாணவ-மாணவியருக்கு அமைச்சர் திரு. எம்.ஆர். விஜயபாஸ்கர் பரிசுகள் வழங்கினார். அப்போது பேசிய அமைச்சர், பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் சாலை விதிகளை கட்டாயம் கடைபிடித்தால் விபத்துக்களை தடுக்கலாம் என வேண்டுகோள் விடுத்தார்.
கடலூர் மாவட்ட வட்டாரப் போக்குவரத்து சார்பில் சாலை பாதுகாப்பு வாரவிழாவை யொட்டி, விழிப்புணர்வு கட்டுரை, பேச்சு மற்றும் ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், வெற்றி பெற்ற மாணவ-மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
இதேபோல், காஞ்சிபுரத்தில் சாலை விதிகளை கடைபிடிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், கவிதை, பேச்சு, கட்டுரை மற்றும் ஓவியப் போட்டிகள் நடைபெற்றன. இதில், மதுராந்தகம், செங்கல்பட்டு, உத்திரமேரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 750-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ-மாணவியர் கலந்துகொண்டனர். இப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.