துக்ளக் பத்திரிகை ஆசிரியரும், அரசியல் விமர்சகருமான திரு.சோ.ராமசாமியின் மறைவுக்கு, தமிழக ஆளுநர், முதலமைச்சர் ஆகியோர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.
துக்ளக் பத்திரிகையின் நிறுவன ஆசிரியரும், அரசியல் விமர்சகருமான திரு.சோ.ராமசாமி, உடல்நலக் குறைவு காரணமாக, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி, இன்று அதிகாலை 3.30 மணி அளவில் காலமானார்.
இதுதொடர்பாக, தமிழக ஆளுநர் திரு. வித்யாசாகர் ராவ் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், நடிகர், பத்திரிகை ஆசிரியர், வழக்கறிஞர், எழுத்தாளர் என பன்முக வல்லுநராகத் திகழ்ந்த சோ. ராமசாமியின் மறைவு அதிர்ச்சியையும், வேதனையையும் அளிப்பதாக தெரிவித்துள்ளார். பன்முகத்தன்மை கொண்ட அவர், மூத்த பத்திரிகையாளர், சிறந்த அரசியல் விமர்சகராக திகழ்ந்தார் - திரு.சோ.ராமசாமியின் இழப்பு பத்திரிகைத் துறைக்கு பேரிழப்பாகும் - சோ. ராமசாமியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதாகவும், அவரது ஆன்மா அமைதிபெற இறைவனிடம் பிரார்த்திப்பதாகவும் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.
முதலமைச்சர் திரு. ஓ. பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், துக்ளக் பத்திரிக்கை நிறுவன ஆசிரியரும், புகழ்பெற்ற அரசியல் விமர்சகருமான திரு. சோ. ராமசாமி உடல்நலக் குறைவினால் இன்று காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த துயரமும், மன வேதனையும் அடைந்ததாகத் தெரிவித்துள்ளார்.
பத்திரிக்கை ஆசிரியர், திரைப்பட கதையாசிரியர், நாடக ஆசிரியர், நடிகர், வழக்கறிஞர் என்ற பன்முக திறன் கொண்ட திரு. சோ. ராமசாமி, திரைப்பட கதாசிரியராகவும், இயக்குநராகவும், 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த பெருமைக்குரியவரும் ஆவார் - புரட்சித் தலைவி அம்மா மீது அளவற்ற அன்பும் பாசமும் கொண்டிருந்தவர் திரு. சோ. ராமசாமி - புரட்சித் தலைவி அம்மாவின் 60-வது பிறந்த தினத்தின் போது திரு. சோ. ராமசாமியின் வீட்டிற்கே சென்று புரட்சித் தலைவி அம்மா ஆசி பெற்றார் - மேலும் 2011-ஆம் ஆண்டு புரட்சித் தலைவி அம்மா ஆட்சிப் பொறுப்பேற்ற போது, திரு. சோ. ராமசாமியின் இல்லம் சென்று அவரது நல்வாழ்த்துகளை பெற்றார் என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
திரு. சோ. ராமசாமி மாநிலங்களவை உறுப்பினராக மக்கள் பணியாற்றியுள்ளதாகவும், அவர் தனது பத்திரிக்கை பணிக்காக வீரகேசரி விருது, கோயங்கா விருது போன்ற பல விருதுகளை பெற்றுள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்.
திரு. சோ. ராமசாமியை இழந்து வாடும், அவரது குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவரது ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்பதாகவும் முதலமைச்சர் திரு. ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, சென்னை M.R.C. நகரில் உள்ள திரு.சோ.ராமசாமியின் இல்லத்திற்கு முதலமைச்சர் திரு. ஒ. பன்னீர்செல்வம் நேரில் சென்று, மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அமைச்சர்கள் திரு.திண்டுக்கல் C.சீனிவாசன், திரு.எடப்பாடி K. பழனிசாமி, திரு.P.தங்கமணி, திரு.S.P.வேலுமணி ஆகியோரும் சோ. ராமசாமியின் உடலுக்கு மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.