திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடும் பனிப்பொழிவு : ஊட்டியில் இருப்பது போன்ற உணர்வு ஏற்பட்டதாக பொதுமக்கள் மகிழ்ச்சி
Dec 4 2016 4:22PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடும் பனிப்பொழிவு நிலவுவதால், ஊட்டியில் இருப்பது போன்ற உணர்வு ஏற்பட்டதாக பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
வழக்கத்திற்கு மாறாக இவ்வாண்டு பருவமழை இதுவரை சரிவர பெய்யாததால், தட்பவெட்ப நிலையில் மாற்றங்கள் காணப்படுகிறது. இந்நிலையில், திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று அதிகாலை முதல் பல மணி நேரம் கடும் பனிப்பொழிவு நிலவியது. சுமார் 50 மீட்டர் தொலைவில் உள்ள பொருட்கள் கூட தெரியாத அளவிற்கு வெண்போர்வை போர்த்தியதுபோல் பனிப்பொழிவு காணப்பட்டது. இதன் காரணமாக, சாலைகளில் முகப்பு விளக்குகளை ஒளிரச்செய்த வண்ணம் வாகனங்கள் மெதுவாகச் சென்றன. ரயில்வே இருப்புப்பாதை மற்றும் ரயில்வே சிக்னல் லைட், பனிப்பொழிவால் மூடப்பட்டிருந்ததால் ரயில்களும் மெதுவாக சென்றன. திருவாரூர் ஸ்ரீ தியாகராஜ சுவாமி ஆலய ராஜகோபுரம் மற்றும் ஆலய திருக்குளம் தெரியாத அளவிற்கு பனி படர்ந்து காணப்பட்டது. இந்தப் பனிப்பொழிவு காரணமாக, ஊட்டியில் இருப்பது போன்ற உணர்வு ஏற்பட்டதாக பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
இதனிடையே, நாகை மாவட்டத்தில் மயிலாடுதுறை, சீர்காழி பகுதிகளில் இன்று அதிகாலை கடும் பனிப்பொழிவு நிலவியது. இதனால் சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு இடையே, முகப்பு விளக்கை ஒளிரச்செய்தபடி சென்றனர். வயல்வெளிகளில் பனித்துளிகள், பயிர்களில் ஸ்படிக மணி கோர்த்தது போல் காணப்பட்டது. பனிப்பொழிவு காரணமாக, பயிர்கள் சூல்பிடிக்கும் காலம் அதிகரிக்கும் என்பதால், மழையை விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.