தீபாவளிப் பண்டிகை நாளை கொண்டாட்டம் - ஜவுளிக் கடைகள், பட்டாசுக் கடைகள் மற்றும் இனிப்புக் கடைகளில் கடைசி நேர மக்கள் கூட்டம்
Oct 28 2016 8:53PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தீபாவளிப் பண்டிகை நாளை உற்சாகத்துடன் கொண்டாடப்படவுள்ள நிலையில், இப்பண்டிகைக்குத் தேவையான பொருட்களை பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் வாங்கி வருகின்றனர். ஜவுளிக்கடைகள், பட்டாசுக் கடைகள் மற்றும் இனிப்புக் கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
தீப ஒளித் திருநாளாம் தீபாவளிப் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. பொதுமக்கள் புத்தாடை அணிந்தும், பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை பரிமாறியும் இப்பண்டிகையைக் கொண்டாடவுள்ளனர். கடந்த சில நாட்களாக சந்தைகள், வணிக வளாகங்கள் மற்றும் கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. விடிந்தால் தீபாவளி என்பதால் விற்பனை சூடுபிடித்துள்ளது. பொதுமக்கள் தீபாவளிப் பண்டிகையை கொண்டாட தயாராகி வருகின்றனர்.
கும்பகோணத்தில் ஆயத்த ஆடைகள், வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது. சாலையோர வியாபாரமும் களைகட்டியுள்ளது. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கும்பகோணத்தில், ஆங்காங்கே தடுப்புகள் அமைக்கப்பட்டு இருசக்கர வாகனங்கள், மற்றும் கார் உள்ளிட்ட வாகனங்களின் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்தை சீர்செய்யும் பணியில் போலீசார், தேசிய மாணவர் படை, ஊர்க்காவல்படை மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டுள்ளனர். கேமராக்கள் மூலம் பொதுமக்களிடம் நடமாட்டம் கண்காணிக்கப்படுகிறது.
சென்னையில் தியாகராயநகர், பாரிமுனை உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் புத்தாடைகள், பட்டாசுகள், இனிப்புகள் ஆகியவற்றை வாங்குவதில் பொதுமக்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். தியாகராய நகர் ரங்கநாதன் தெருவில் மக்கள்கூட்டம் அலைமோதுகிறது. 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பொதுமக்கள் அச்சமின்றி, பாதுகாப்புடன் பொருட்களை வாங்கிச் செல்கின்றனர்.