தீபாவளி பண்டிகையையொட்டி, பொதுமக்கள் எவ்வித சிரமமுன்றி சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொள்ள ஏதுவாக, சென்னையில் இருந்து 2-வது நாளாக இன்றும் 3,992 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் சிறப்பு பேருந்துகளின் சேவையினை அமைச்சர் நேரில் ஆய்வு செய்தார்.
தீபாவளி பண்டிகையை, மக்கள், தங்கள் சொந்த ஊர்களில் மகிழ்ச்சியுடன் கொண்டாட ஏதுவாக, முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா உத்தரவுப்படி, ஒவ்வொரு ஆண்டும் சென்னை உட்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதன்படி, இந்த ஆண்டும் தீபாவளி திருநாளை முன்னிட்டு நேற்று முதல் 3 நாட்களுக்கு சென்னையில் இருந்து மொத்தம் 11,225 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
பயணிகள் எவ்வித நெரிசலுமின்றி பயணம் மேற்கொள்வதற்காக, சென்னை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம் தவிர, அண்ணா நகர், பூந்தமல்லி உள்ளிட்ட இடங்களில் 4 தற்காலிக பேருந்து நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
சென்னை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் 26 சிறப்பு கணினி முன்பதிவு மையங்களும், தாம்பரம் சானடோரியம் பேருந்து நிலையத்தில் 2 முன்பதிவு மையங்களும், பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் ஒரு முன்பதிவு மையமும் தொடங்கப்பட்டு, சிறப்புப் பேருந்துகளுக்கான பயணச்சீட்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
சென்னையில் இருந்து அனைத்து மாவட்ட தலைநகரங்கள் மற்றும் முக்கிய ஊர்களுக்கு நேற்று 3,254 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து, 2-வது நாளாக இன்று 3,992 பேருந்துகளும், இயக்கப்படுகின்றன. நாளை 3,979 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
செங்குன்றம் வழியாக ஆந்திரா செல்லும் தமிழகம் மற்றும் ஆந்திர மாநிலப் பேருந்துகள் அனைத்தும் அண்ணா நகர் மேற்கில் உள்ள மாநகரப் போக்குவரத்துக் கழக பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டுச் செல்கின்றன.
கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள் மற்றும் காஞ்சிபுரம் செல்லும் பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு எதிரே உள்ள மாநிலத் தேர்தல் ஆணைய பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படுகின்றன.
திண்டிவனம், விக்கிரவாண்டி வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் செல்லும் அனைத்து வழித்தடப் பேருந்துகள், தாம்பரம் சானடோரியத்தில் உள்ள அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படுகின்றன.
பூந்தமல்லி வழியாக வேலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மற்றும் ஓசூர் போன்ற ஊர்களுக்குச் செல்லும் பேருந்துகள் பூந்தமல்லி பேருந்து நிலையத்திலிருந்து புறப்படுவதால் ஏராளமானோர் அங்கிருந்தே சொந்த ஊர் பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.
இதனால், கோயம்பேடு சென்று பேருந்தை பிடிக்கவேண்டிய சிரமம் தவிர்க்கப்பட்டிருப்பதாகவும், போதுமான அளவுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவதால், கூட்ட நெரிசல் பிரச்னை இன்றி பயணம் மேற்கொள்ள முடிவதாகவும் பயணிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். எவ்வித சிரமமும் இன்றி குடும்பத்தினருடன் சொந்த ஊர்களுக்குச் செல்ல சிறப்பு ஏற்பாடுகள் செய்துள்ள முதலமைச்சருக்கு பயணிகள் நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நேற்று முதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கத்தைத் தொடர்ந்து, பொதுமக்களுக்கு செய்துதரப்பட்டுள்ள வசதிகளை அமைச்சர் திரு. எம்.ஆர். விஜயபாஸ்கர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, சிறப்பு ஏற்பாடுகள் குறித்து பயணிகளிடம் கேட்டறிந்த அமைச்சர், தொடர்ந்து ஆம்னி பேருந்து நிலையத்திற்கும் சென்று, அங்கு அதிகக் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.