தீபாவளியையொட்டி, கோ-ஆப்டெக்ஸில், ஜவுளி ரகங்கள் அமோக விற்பனை - இயற்கை சாயமிட்ட ஆர்கானிக் காட்டன் சேலைகளை வாங்க ஆர்வம் காட்டும் பொதுமக்கள்
Oct 27 2016 11:10AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாகை மாவட்டம் மயிலாடுதுறை கோ-ஆப்டெக்ஸ் கிளையில் விற்பனை செய்யப்படும் இயற்கை சாயமிட்ட ஆர்கானிக் காட்டன் சேலைகளை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர். தோல்நோய்கள் தவிர்க்கப்படுவதால், வாடிக்கையாளர்கள் பெரிதும் விரும்புகின்றனர்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் சிறப்பு விற்பனை, மயிலாடுதுறை கிளையில் நடைபெற்று வருகிறது. மேலும், பண்டிகைக்கால விற்பனையாக 15 கோடி ரூபாய் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, இயற்கை சாயமிட்ட ஆர்கானிக் காட்டன் சேலைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. கோவை மாவட்டம் வதம்பச்சேரி பகுதி நெசவாளர்களால் உற்பத்தி செய்யப்பட்டு, இயற்கை சாயம் ஏற்றப்பட்ட சேலைகள், வதம்பச்சேரி ஆர்கானிக் காட்டன் சேலைகள் என்ற பெயரில் விற்பனை செய்யப்படுகின்றன.
உடலுக்கு தீங்கு இழைக்காத இயற்கை முறையிலான சாயப் பொருட்களைக் கொண்டு, ஆர்கானிக் சேலைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதனால், வெயிலுக்கு இதமாகவும், ஒவ்வாமைஏற்படாமல் தோல்நோய்கள் தவிர்க்கப்படுவதால், இதனை வாடிக்கையாளர்கள் பெரிதும் விரும்புகின்றனர். இவை, ஆயிரத்து 200 ரூபாய் முதல் 5 ஆயிரம் ரூபாய் வரையில், 30 சதவீத சிறப்பு தள்ளுபடி விலையில் கிடைக்கின்றன.
ஆர்கானிக் காட்டன் சேலைகள் மட்டுமன்றி, மஹாராஜா பட்டுச்சேலைகள், மென்பட்டுகள், கோரா காட்டன் சேலைகள், ஜீன்ஸ் டாப்ஸ், அருப்புக்கோட்டை, பரமக்குடி, உறையூர் மற்றும் சேலம் பருத்தி சேலைகள், மீரட் போர்வைகள் உள்ளிட்டவையும் மயிலாடுதுறை கோ-ஆப்டெக்ஸ் கிளையில் விற்பனைக்கு உள்ளன. மேலும், ஜெயகார்த்திகா என்ற புதிய சேலை ரகமும், ஆடவருக்கு 100 சதவீத பருத்தியினால் ஆன சட்டைகளும், புதிய பட்டு சேலை ரகங்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால், கோ-ஆப்டெக்ஸில் தங்களுக்குத் தேவையான ஜவுளி ரகங்களை, மக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.