முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவின்பேரில், இந்த ஆண்டும் தீபாவளி திருநாளை முன்னிட்டு, சென்னை மற்றும் தமிழகத்தின் பிற இடங்களில் இருந்து, அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் சார்பில் 21,289 சிறப்புப் பேருந்துகள், நாளை முதல் 3 நாட்களுக்கு இயக்கப்படுகின்றன. வெளியூர் செல்லும் சிறப்புப் பேருந்துகளுக்காக, சென்னையில் கோயம்பேடு, அண்ணாநகர் மேற்கு, மாநிலத் தேர்தல் ஆணையம், தாம்பரம் சானிடோரியம், பூவிருந்தவல்லி ஆகிய இடங்களில் கூடுதலாக பேருந்துநிலையங்கள் அமைக்கப்படுகின்றன.
முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா உத்தரவின்பேரில், பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களில் தீபாவளி பண்டிகையை குடும்பத்தினருடன் கொண்டாடும் வகையில், ஆண்டுதோறும் அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் சார்பில், சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதுபோல் இந்த ஆண்டும் நாளை முதல் 28-ம் தேதி வரை சென்னை மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்து 21,289 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
இதன்படி, சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் பேருந்துகள் 5 இடங்களில் இருந்து புறப்படுகின்றன. சென்னை அண்ணாநகர் மேற்கில் உள்ள பேருந்து நிலையத்திலிருந்து, செங்குன்றம் வழியாக ஆந்திரா செல்லும் அனைத்து தமிழக மற்றும் ஆந்திர அரசுப் பேருந்துகள் - கோயம்பேடு பேருந்துநிலையம் எதிரே, நூறடி சாலையில் உள்ள மாநில தேர்தல் ஆணைய பேருந்துநிலையத்தில் இருந்து, கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், காஞ்சிபுரம் செல்லும் பேருந்துகள் - தாம்பரம் சானிடோரியம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்து, திண்டிவனம், விக்கிரவாண்டி வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் செல்லும் அனைத்து வழித்தடப் பேருந்துகள் - பூவிருந்தவல்லி பேருந்து நிலையத்தில் இருந்து வேலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மற்றும் ஓசூர் போன்ற ஊர்களுக்குச் செல்லும் பேருந்துகள் - கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து விழுப்புரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருவனந்தபுரம், திருவண்ணாமலை, ஆற்காடு, சேலம், கோயம்புத்தூர், எர்ணாகுளம் மற்றும் பெங்களூர் செல்லும் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
சென்னையில் இருந்து நாளை, வழக்கமாக இயக்கப்படும் 2,275 பேருந்துகளுடன் கூடுதலாக 979 சிறப்பு பேருந்துகள், 27-ம் தேதி ஆயிரத்து 717 சிறப்பு பேருந்துகள், 28-ம் தேதி ஆயிரத்து 704 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 3 நாட்களில் 4,400 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் - ஒட்டுமொத்தமாக 3 நாட்களிலும் சேர்த்து 11,225 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் - மாநிலத்தின் பிற முக்கிய ஊர்களிலிருந்து நாளை 2,507 சிறப்பு பேருந்துகள், 27-ம் தேதி 3,488 சிறப்பு பேருந்துகள், 28-ம் தேதி, 4,069 சிறப்பு பேருந்துகள் என 3 நாட்களில் 10 ஆயிரத்து 64 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளியூர் செல்லும் சிறப்புப் பேருந்துகளுக்காக, சென்னை கோயம்பேடிலிருந்து தற்காலிக பேருந்து நிலையத்திற்கு பொதுமக்கள் சென்றுவர ஏதுவாக, மாநகர போக்குவரத்து கழகம் சார்பில், 200 சிறப்பு பேருந்துகள், இணைப்பு பேருந்துகளாக இயக்கப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று, தீபாவளி பண்டிகை முடிந்த பின்னர், பொதுமக்கள் மீண்டும் ஊர் திரும்பும் வண்ணம், வரும் 30-ம் தேதி முதல், நவம்பர் மாதம் ஒன்றாம் தேதி வரை சென்னை மற்றும் பிற பகுதிகளுக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் - அவை, தீபாவளிக்கு ஊர் செல்லும் வகையில் இயக்கப்படும் சிறப்பு பேருந்துகள் எண்ணிக்கை அளவிலேயே இருக்கும் - 300 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேல் செல்லும் பொதுமக்களின் வசதிக்காக, சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் - 26, தாம்பரம் சானிடோரியம் பேருந்து நிலையத்தில் - 2, பூவிருந்தவல்லி பேருந்து நிலையத்தில் - 1 என மொத்தம் 29 சிறப்பு முன்பதிவு செயலறைகள் நேற்றுமுதல் 28-ம் தேதி வரை செயல்படும் என்றும் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.