டெல்டா பாசன வசதிக்காக, கல்லணையில் இருந்து முறை தண்ணீர் திறப்பு - முதல் 6 நாட்கள் வெண்ணாற்றிலும், அடுத்த 6 நாட்கள் காவேரியிலும், மாறி மாறி தண்ணீர் திறக்க நடவடிக்கை
Oct 1 2016 11:30AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தஞ்சை மாவட்டம் கல்லணையில் இருந்து, காவேரி டெல்டா மாவட்டங்களில் பாசனத்திற்காக, முறைப்பாசனம் மூலம் தண்ணீரை பகிர்ந்தளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, நேற்று முதல் இந்த நடைமுறை செயல்படுத்தப்படுகிறது.
காவேரி டெல்டா பாசனத்திற்காக, நேற்று மாலையில் இருந்து முறைப்பாசனம் அமல்படுத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, நேற்று முதல் 6 நாட்கள் வெண்ணாற்றிலும், அடுத்த 6 நாட்கள் காவேரியிலும் என முறை வைத்து நீர் பங்கீடு செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் திரு.ஆ.அண்ணாதுரை தெரிவித்துள்ளார். கல்லணை கால்வாய் மேற்பகுதி முறை, கீழ்ப்பகுதி முறை என உள்முறை வைத்தும் தண்ணீர் திறக்கப்படும். வெண்ணாறு முறை பாசனத்திற்காக நேற்று மாலை 6 மணி முதல் வரும் 6-ம் தேதி மாலை 6 மணி வரை காவேரியில் இருந்து ஆயிரம் கனஅடியும், வெண்ணாற்றில் இருந்து 5 ஆயிரம் கனஅடியும், கல்லணைக் கால்வாயில் இருந்து ஆயிரத்து 500 கனஅடியும், கொள்ளிடத்தில் இருந்து ஆயிரத்து 200 கனஅடியும் தண்ணீர் திறந்து விடப்படும். இதேபோன்று, காவேரி முறைப் பாசனத்திற்காக வரும் 6-ம் தேதி மாலை 6 மணி முதல் 12-ம் தேதி மாலை 6 மணி வரை பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.