சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 3-வது நாளாக மழை - தமிழகத்தில் இன்றும் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்
Oct 1 2016 10:28AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 3-வது நாளாக நேற்றும் மழை பெய்தது. இந்நிலையில் தமிழ்நாட்டின் பல இடங்களில் இன்றும் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வருகிறது. சென்னையில் கிண்டி, ஈக்காட்டுத் தாங்கல், சைதாப்பேட்டை, வடபழனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும், அம்பத்தூர், ஆவடி போன்ற புறநகர் பகுதிகளிலும் தொடர்ந்து 3-வது நாளாக நேற்றும் மழை பெய்தது. மழை காரணமாக பகல்நேர வெப்பநிலை தணிந்து குளுமையான சூழ்நிலை நிலவுகிறது.
திருவள்ளூர் மாவட்டத்தில், திருவொற்றியூர், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, சோழவரம், செங்குன்றம், பூந்தமல்லி, போரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று மாலைமுதல் விட்டுவிட்டு மழை பெய்தது.
வெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் இன்று ஒருசில இடங்களிலும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மழைக்கு வாய்ப்புள்ளதாக என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும், இரவு நேரத்தில் நகரின் ஒருசில பகுதிகளில் மழைபெய்யக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.