சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத சணல் பொருட்கள் இடம்பெற்றுள்ள கண்காட்சி - விதவிதமான பொருட்களை வாங்கிச் செல்லும் பொதுமக்கள்
Sep 29 2016 7:48PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சுற்றுச்சூழலுக்கு உகந்த, கண்களுக்கு ரம்மியமான வண்ணங்களிலும், வடிவங்களிலும் விதவிதமாக சணலால் உருவாக்கப்பட்ட பொருட்களின் கண்காட்சி சென்னையில் இன்று தொடங்கி 3 நாட்கள் நடைபெறுகிறது.
சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக, நாகரீக உலகின் வரப்பிரசாதமாக விளங்குவது சணல். நவராத்திரியை முன்னிட்டு சணலால் தயாரிக்கப்பட்ட பொருட்களின் கண்காட்சி மற்றும் விற்பனை சென்னை அடையாறில் இன்று தொடங்கி, வரும் 2-ம் தேதி வரை நடைபெறுகிறது. பல வண்ணங்களில் சணலால் ஆன விதவிதமான ஹேண்ட் பேக்குகள், டிராவல் பேக், பைல், மொபைல் பவுச், லேப்டாப் பேக்குகள், மிதியடிகள், டேபிள் மேட்டுகள், குழந்தைகளுக்கான பென்சில் பவுச் என பல்வேறு பொருட்கள் கண்காட்சியை அலங்கரிக்கின்றன.
வீட்டின் மிக முக்கியமான ரேஷன் கார்டு, கேஸ் இணைப்பு அட்டை, மின்சார கட்டண அட்டை போன்றவைகளைப் பாதுகாக்க, பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள தயாரிப்புகள், திருமணம் போன்றவற்றிற்கு பணம் வைத்துக் கொடுப்பதற்கான அழகான கவர்கள், அழகழகான தாம்பூலப் பைகள், குதிரை, ஆந்தை போன்ற உருவங்களில் நவராத்திரிக்கு பரிசளிக்கக் கூடிய வகையில் எழிலார்ந்த பொருட்கள் ஏராளமாக இங்கு குவிந்து கிடக்கின்றன.
பொருட்களைக் கட்டவும், சாக்கு பைகளாகவுமே பயன்படுத்தப்பட்டு வந்த சணல் - இன்று, சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் ஒரு கேடயமாக - மகளிரின் கலைநயத்தை வெளிப்படுத்தவும், வாழ்வாதாரத்தைப் பெருக்கிக் கொள்ளவும் விளங்கும் ஒரு நவீன கருவி என்றால், அது மிகையல்ல.