உச்சநீதிமன்ற உத்தரவுக்கிணங்க, காவேரி மேலாண்மை வாரியத்தை அமைக்கும் பணி தொடக்கம் - மத்திய நீர்வளத்துறை செயலாளர் அறிவிப்பு - காவேரி நதிநீர் தொடர்பாக, தமிழக, கர்நாடக அரசுகளின் கருத்துக்கள் உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்படும் என மத்திய அமைச்சர் தகவல்
Sep 29 2016 6:00PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
காவேரி நதிநீர்ப் பங்கீடு குறித்து, தமிழகம் மற்றும் கர்நாடகத்தில் கருத்துகளை கேட்டறிந்ததாகவும், இதுகுறித்து உச்சநீதிமன்றத்துக்கு தெரிவிக்கப்படும் என்றும் டெல்லியில் நடைபெற்ற கூட்டத்திற்குப் பின்னர் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் செல்வி உமாபாரதி தெரிவித்துள்ளார். இதனிடையே, உச்சநீதிமன்ற உத்தரவுக்கிணங்க, காவேரி மேலாண்மை வாரியத்தை அமைக்கும் பணியை மத்திய அரசு தொடங்கிவிட்டதாக நீர்வளத்துறை செயலாளர் திரு. சசிசேகர் தெரிவித்துள்ளார்.
உச்சநீதிமன்ற உத்தரவுக்கிணங்க, தமிழகம் மற்றும் கர்நாடகா பங்கேற்ற உயர்நிலைக் கூட்டத்தை மத்திய அரசு இன்று நடத்தியது. இதில், தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் உரை வாசிக்கப்பட்டது. காவேரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வேண்டும் என்றும், உச்சநீதிமன்ற உத்தரவுக்கிணங்க தமிழகத்திற்கு தர வேண்டிய காவேரி நீரை கர்நாடகா திறந்துவிட வேண்டும் என்று முதலமைச்சர் தனது உரையில் வலியுறுத்தியிருந்தார். இதனைத்தொடர்ந்து, கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மத்திய நீர்வளத்துறை அமைச்சர் செல்வி உமாபாரதி, இருமாநிலங்களின் கருத்துகளும் கேட்டறியப்பட்டதாகவும், இதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும் தெரிவித்தார். இதனிடையே, உச்சநீதிமன்ற உத்தரவுக்கிணங்க, காவேரி மேலாண்மை வாரியத்தை அமைக்கும் பணியை மத்திய அரசு தொடங்கிவிட்டதாக நீர்வளத்துறை செயலாளர் திரு. சசிசேகர் தெரிவித்துள்ளார்.