தமிழகத்திலேயே முதல்முறையாக முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை - குணமடைந்த பயனாளி மற்றும் குடும்பத்தினர் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நெஞ்சார்ந்த நன்றி
Sep 29 2016 5:57PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்திலேயே முதல்முறையாக அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது. எந்த செலவுமின்றி சிகிச்சை பெற்று குணமடைந்த பயனாளி மற்றும் அவரது குடும்பத்தினர் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம், பார்த்திபனூரைச் சேர்ந்த பாண்டியம்மாள் என்ற 60 வயது மூதாட்டி, கடந்த 10 ஆண்டுகளாக மூட்டுவலிக்காக பல்வேறு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தார். இறுதியில், மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். பல லட்சம் ரூபாய் செலவாகும் இந்த அறுவை சிகிச்சை செய்து கொள்வதற்கு நிதி வசதியில்லாததால், திருமதி. பாண்டியம்மாள், பார்த்திபனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அணுகினார். அங்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அவருக்கு எந்த செலவுமின்றி அரசு மருத்துவர்கள் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். இதனையடுத்து, பாண்டியம்மாள் குணமடைந்து தற்போது நல்ல நிலையில் உள்ளார். இதுவரை மாவட்ட அரசு மருத்துவமனைகளில் மட்டுமே செய்யப்பட்டு வந்த இந்த அறுவை சிகிச்சை தற்போது முதல்முறையாக அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செய்யப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது.