தேனி மாவட்டத்தை சேர்ந்த காய்கறி சிற்பி ஒருவர், இரு கண்களையும் துணியால் கட்டிக்கொண்டு காய்கறிகளில், ஒரு சில நிமிடங்களில் செதுக்கும் உருவங்கள் பார்வையாளர்களை பிரமிப்பில் ஆழ்த்துகின்றன.
கல் சிற்பம், மர சிற்பம், மணல் சிற்பம் என பல்வேறு சிற்பக்கலைகள் உலகெங்கிலும் வளர்ந்துள்ள நிலையில் காய்கறி சிற்பக்கலை பல்வேறு தரப்பினரிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில், தேனி மாவட்டத்தை சேர்ந்த இளஞ்செழியன் என்பவர் கேரட், முள்ளங்கி, பூசணி, புடலங்காய், பாகற்காய், பீட்ரூட், கீரை உள்ளிட்டவற்றை பயன்படுத்தி பூக்கள், பறவைகள், மிருகங்கள், தலைவர்களின் உருவங்கள், உலகப் புகழ் பெற்ற சின்னங்கள் என பல்வேறு உருவங்களை செதுக்கி அசத்தி வருகிறார். 10-ம் வகுப்பு முடித்து சமையல் கலை பயிற்சி பெற்றுள்ள இவர், தனது ஆர்வம் காரணமாக தாமாகவே காய்கறிகளில் சிற்பங்களை செதுக்குவதை கற்றுக்கொண்டார். 13 ஆண்டுகளாக திருமணம், பிறந்தநாள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் இந்தக் கலை மூலம் வருமானம் ஈட்டி வருகிறார்.
தான் கற்ற காய்கறி சிற்ப கலையை, மகளிர் குழுக்களுக்கும், இல்லத்தரசிகளுக்கும் கற்றுக்கொடுத்து வருகிறார் இளஞ்செழியன். இதனால் தாங்கள் சுயமாக வருமானம் ஈட்ட முடிவதாக பெண்கள் தெரிவிக்கின்றனர்.
தோட்டக்கலை துறை சார்பாக, கொடைக்கானல், ஊட்டி, சுருளித்தீர்த்தம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் கோடை விழா, சாரல் விழா மற்றும் மலர் கண்காட்சிகளில், ஈஃபில் டவர், அன்னப்பறவை, ஸ்பைடர் மேன், முல்லைப் பெரியாறு அணை கட்டிய பென்னிகுவிக் மணி மண்டபம், அக்னி ராக்கெட், அலங்கார வளைவு என காய்கறிகளில் செய்து அசத்தி உள்ளார் இளஞ்செழியன். மேலும், தனது கண்களை துணியால் கட்டிக்கொண்டு ஒரு சில நிமிடங்களில், அவர் பூக்களை செதுக்கும் காட்சியை காணும் பார்வையாளர்கள் பிரமிப்படைகின்றனர்.
இந்நிலையில் கடந்த ஆண்டு தைவான் நாட்டில் நடைபெற்ற காய்கறி சிற்ப போட்டியில், பல்வேறு நாடுகளில் இருந்து வந்த 10 நடுவர்களில் இந்தியா சார்பாக பங்கேற்ற இளஞ்செழியன், தனது திறமையை வெளிப்படுத்தி அந்நாட்டு தொலைக்காட்சி மற்றும் நாளேடுகளில் முக்கிய இடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.