அ.இ.அ.தி.மு.க தலைமைக் கழகப் பேச்சாளரும், உடுமலைப்பேட்டை நகர எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளருமான திரு. தீப்பொறி கார்த்திகேயன் மறைவுக்கு, கழக பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான செல்வி ஜெயலலிதா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான செல்வி ஜெ ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், தலைமைக் கழகப் பேச்சாளரும், திருப்பூர் புறநகர் மாவட்டம், உடுமலைப்பேட்டை நகர எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளருமான திரு. தீப்பொறி கார்த்திகேயன், உடல் நலக் குறைவால் மரணமடைந்து விட்டார் என்ற செய்தி கேட்டு வருத்தமுற்றதாகத் தெரிவித்துள்ளார்.
கழகத்தின் மீதும், கழகத் தலைமையின்மீதும் மிகுந்த விசுவாசம் கொண்டு பணியாற்றி வந்த, ஆரம்பகாலக் கழக உடன்பிறப்பு திரு. தீப்பொறி கார்த்திகேயன், தலைமைக் கழகப் பேச்சாளராக, கழகத்தின் கொள்கைகளையும், கழக அரசின் சாதனைகளையும், எதிர்க்கட்சியினரின் பொய்ப்பிரச்சாரங்களையும், நாட்டு மக்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் எடுத்துரைத்தவர் ஆவார் - திரு. தீப்பொறி கார்த்திகேயனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு, தமது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதிபெற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்பதாக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.
முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா வெளியிட்டுள்ள மற்றொரு இரங்கல் செய்தியில், வேலூர் கிழக்கு மாவட்டம், காட்பாடி ஒன்றியக் கழக துணைச் செயலாளர் திரு. M. தங்கவேல், பெரம்பலூர் மாவட்டம், செந்துறை ஒன்றிய எம்.ஜி.ஆர். இளைஞரணி தலைவர் திரு. P. மணிகண்டன், திருப்பூர் புறநகர் மாவட்டம், குடிமங்கலம் ஒன்றியம், அப்பிலிபட்டி கிளைக் கழகச் செயலாளரும், பெரியபட்டி ஊராட்சிமன்ற துணைத் தலைவருமான திரு. K. ராசு ஆகியோர் மரணமடைந்து விட்டனர் என்ற செய்தி கேட்டும்; வடசென்னை வடக்கு மாவட்டம் டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் பகுதி, 47 மேற்கு வட்டக் கழகச் செயலாளர் திரு. S. ரத்தினம், திண்டுக்கல் மாவட்டம், சானார்பட்டி ஒன்றிய ஜெ ஜெயலலிதா பேரவை துணைத் தலைவர் திரு. Y.ராயப்பன் ஆகியோர் சாலை விபத்தில் அகால மரணமடைந்துவிட்டனர் என்ற செய்திகேட்டும் மிகுந்த வருத்தமுற்றதாகத் தெரிவித்துள்ளார்.
திரு. தங்கவேல், திரு. மணிகண்டன், திரு.ராசு, திரு. ரத்தினம் மற்றும் திரு. ராயப்பன் ஆகியோரை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தினருக்கு தமது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், மரணமடைந்ததோர்களது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்பதாக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.