முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் தண்டனைப் பெற்று சிறையில் உள்ள 7 பேரையும் விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி, முதலமைச்சர் ஜெயலலிதா அறிவுறுத்தலின்பேரில், உச்சநீதிமன்ற அரசியல்சாசன அமர்வு முன்பு, மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், மாநில அரசின் உரிமையில் மத்திய அரசு தலையிடக்கூடாது என நாடாளுமன்றத்தில் அ.இ.அ.தி.மு.க. வலியுறுத்தல்
Jul 30 2016 7:44AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் தண்டனைப் பெற்று சிறையில் உள்ள 7 பேரையும் விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அறிவுறுத்தலின்பேரில், உச்சநீதிமன்ற அரசியல்சாசன அமர்வு முன்பு, மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், மாநில அரசின் உரிமையில் மத்திய அரசு தலையிடக்கூடாது என்று நாடாளுமன்றத்தில் அ.இ.அ.தி.மு.க. கேட்டுக்கொண்டுள்ளது.
நாடாளுமன்ற மாநிலங்களவையில் பேசிய அ.இ.அ.தி.மு.க. மாநிலங்களவை குழுத்தலைவர் திரு. A.நவநீதகிருஷ்ணன், குற்றவியல் நடைமுறைச் சட்ட பிரிவின் அடிப்படையில் சி.பி.ஐ.-யால் விசாரிக்கப்பட்டு வரும் ஒரு வழக்கில், மத்திய அரசின் ஆலோசனையை மட்டுமே மாநில அரசு பெறவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டினார். மேலும், ராஜிவ் கொலை வழக்கில் தண்டனை குறைக்கப்பட்ட 7 பேரின் விடுதலை தொடர்பாக, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அறிவுறுத்தலின்பேரில், தமிழக அரசின் சார்பில், உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு முன்னிலையில், மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பதாகவும், இந்த விவகாரத்தில் மாநில அரசின் உரிமையில் மத்திய அரசு தலையிடக்கூடாது என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
இதனிடையே, மக்களவையில் ரயில்வே பட்ஜெட் மீதான விவாதத்தின்போது பேசிய கிருஷ்ணகிரி தொகுதி அ.இ.அ.தி.மு.க. உறுப்பினர் திரு. அசோக் குமார், ஆங்கிலேயர் காலத்தில் கிருஷ்ணகிரி வழியாக ரயில் போக்குவரத்து இருந்ததை சுட்டிக்காட்டினார். அதன்படி, ஜோலார்பேட்டையிலிருந்து கிருஷ்ணகிரி வழியாக ஓசூருக்கு ரயில் சேவை தொடங்க வேண்டும் என்றும், தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஏற்கெனவே வலியுறுத்தியுள்ளபடி, மாநிலத்தில் நிலுவையில் உள்ள ரயில்வே திட்டங்களை விரைந்து நிறைவேற்றவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.