காணாமல்போன இந்திய விமானப்படை விமானத்தை தேடும் விவகாரம் : அமெரிக்காவின் உதவியை நாடியிருப்பதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் தகவல்
Jul 30 2016 7:07AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நடுவானில் காணாமல் போன இந்திய விமானப் படை விமானத்தைக் கண்டுபிடிக்க அமெரிக்காவின் உதவியை நாடியிருப்பதாக மத்திய பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சென்னையை அடுத்த தாம்பரம் விமானப் படைத் தளத்தில் இருந்து அந்தமான் தலைநகர் போர்ட்பிளேருக்கு கடந்த 22-ம் தேதியன்று புறப்பட்டுச் சென்று நடுவழியில் காணாமல் போன ஏ.என். 32 விமானம், கடலில் விழுந்திருக்கக் கூடும் என்று கருதப்படுவதை அடுத்து, கடந்த 8 நாட்களாக கடலில் தேடுதல் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன. எனினும் விமானத்தைப் பற்றிய எந்த தகவலும் உறுதியாக கிடைக்கவில்லை.
இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்ற மாநிலங்களவையில் பேசிய மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு. மனோகர் பாரிக்கர், விமானத்தை கண்டுபிடிக்க அனைத்து வகை தொழில் நுட்ப உத்திகளும் பயன்படுத்தப் பட்டு வருவதாக கூறினார். விமானம், நடுவானில் மறைந்த நேரத்தில், அதன் எந்தவொரு சமிக்ஞையும் ரேடாரில் பதிவாகாமல் போனதுதான் கவலை தருவதாக உள்ளது என்றும் அவர் மேலும் கூறினார். இதனால்தான், அமெரிக்க பாதுகாப்புத் துறையினரிடம் தொடர்புகொண்டு, அவர்களின் செயற்கைக் கோள்களில், ஏ.என்.32 விமானத்தின் சமிக்ஞைகள் ஏதேனும் பதிவாகியுள்ளதா என்பதை கண்டறிந்து தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் திரு. மனோகர் பாரிக்கர் தெரிவித்தார்.