முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சீராய்வு மனு தாக்கல் : 7 பேரை விடுதலை செய்ய வேண்டிய விவகாரத்தில் மத்திய அரசின் ஆலோசனையை பெற வேண்டுமே தவிர, அனுமதி பெற தேவையில்லை என்றும் மனுவில் வலியுறுத்தல்
Jul 27 2016 10:44AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது. குற்றவாளிகள் 7 பேரை விடுதலை செய்ய வேண்டிய விவகாரத்தில் மத்திய அரசின் ஆலோசனையை பெற வேண்டுமே தவிர, அனுமதியை பெற தேவையில்லை என்றும் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் திரு. ராஜீவ் காந்தி கடந்த 1991-ம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில் படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக சாந்தன், முருகன், பேரறிவாளன் உட்பட 7 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்த மரண தண்டனை கடந்த 2014-ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தால் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில், குற்றம்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்யும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவை, முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதா தலைமையிலான தமிழக அமைச்சரவை கடந்த 2014-ம் ஆண்டு பிப்ரவரி 19-ம் தேதி எடுத்தது. இதனை, சட்டப்பேரவையில் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அறிவித்தார். தமிழக அமைச்சரவையின் இந்த முடிவு, உடனடியாக மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும், மத்திய அரசு 3 நாட்களுக்குள் தனது கருத்தினை தெரிவிக்காமல் காலம் தாழ்த்தினால், மாநில அரசுக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில், அந்த 7 பேரும் விடுவிக்கப்படுவார்கள் என்றும் முதலமைச்சர் செல்விஜெயலலிதா சட்டப்பேரவையில் திட்டவட்டமாக தெரிவித்தார்.
இதனை எதிர்த்து மத்திய அரசு தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், 7 பேரின் விடுதலைக்கு தடை விதித்ததோடு, இந்த வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றியது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகளை விடுதலை செய்வது குறித்து மத்திய அரசுதான் முடிவெடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது. சி.பி.ஐ. விசாரித்த வழக்குகளில் மத்திய அரசுக்கே அதிகாரம் உள்ளது என்றும் அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து, தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் இன்று சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. 7 பேரை விடுதலை செய்ய வேண்டிய விவகாரத்தில் மத்திய அரசின் ஆலோசனையை பெற வேண்டுமே தவிர, அனுமதியை பெற தேவையில்லை என்றும் மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.