இளம் விஞ்ஞானிகளை உருவாக்க முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அளித்து வரும் ஊக்கம் காரணமாக, வெளிநாட்டு மாணவர்களுக்கு இணையாக இயந்திர மனிதனை உருவாக்கி தேனி மாவட்ட மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
மாணவ-மாணவியரின் கல்வித்தரத்தை உயர்த்த வேண்டும் என்ற உயரிய நோக்கில், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, விலையில்லா மடிக்கணினி, பாடப்புத்தகம், மிதிவண்டி, சீருடை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதால், தமிழகம் கல்வித்துறையில் முதன்மை மாநிலமாகத் திகழ்ந்து வருகிறது.
அதுமட்டுமின்றி, இளம் விஞ்ஞானிகளாக மாணவ-மாணவியர் உருவாகும் நோக்கில், புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் விதமாக, முதலமைச்சரின் உத்தரவுப்படி பள்ளிகளில் அறிவியல் கண்காட்சிகளும் நடத்தப்பட்டு வருகின்றன. இதன்காரணமாக, ஊக்கம் பெரும் மாணவ-மாணவியர், பல்வேறு புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளை படைத்து வருகின்றனர்.
அந்த வகையில், தேனி மாவட்டம் கம்பத்தைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவர் முகம்மது இர்ஷாத், ப்ளஸ்-1 மாணவர் டோடி அல்சயாத் ஆகியோர் இயந்திர மனிதனை உருவாக்கி சாதனைபடைத்துள்ளனர். மடிக்கணினி உதவியுடன் கட்டளைக்கு ஏற்ப, உடற்பயிற்சிகள், நடைபயிற்சி, நடனம் உள்ளிட்டவற்றை செய்து இயந்திர மனிதன், காண்போரை வியப்படைய வைக்கிறது.
வெளிநாடுகளில் வீடுகள், வணிக நிறுவனங்கள் என அனைத்து இடங்களிலும் இயந்திர மனிதனை பயன்படுத்தி வரும் நிலையில், இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இதை வடிவமைத்ததாக மாணவர்கள் தெரிவித்தனர். மேலும், விரைவில் நடைபெறவுள்ள மாநில மற்றும் தேசிய அளவிலான கண்காட்சியில், இந்த இயந்திர மனிதனை இடம்பெறச் செய்து, தமிழகத்திற்கும் நாட்டிற்கும் பெருமை சேர்ப்போம் என்றும் மாணவர்கள் பெருமிதத்துடன் தெரிவித்தனர்.
மாணவ-மாணவியரை ஊக்குவிக்கும் வகையில், அறிவியல் கண்காட்சிகளை நடத்தி இளம் விஞ்ஞானிகளை உருவாக்கி வரும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு மாணவ-மாணவியரும், ஆசியர்களும் நன்றியும், பாராட்டும் தெரிவித்துக்கொண்டனர்.