இலங்கை கடற்படையினரால் நேற்று முன்தினம் பிடித்து செல்லப்பட்ட நாகப்பட்டினம் மாவட்ட மீனவர்கள் 5 பேர் உட்பட, இலங்கை சிறைகளில் உள்ள 29 மீனவர்களையும், 94 மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்க வெளியுறவுத் துறை அமைச்சகம் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா, பிரதமர் திரு. நரேந்திர மோடிக்கு இன்று எழுதியுள்ள கடிதத்தில், நாகை மாவட்டம் விழுந்தமாவடி மீன்பிடித் தளத்தில் இருந்து இயந்திர படகு ஒன்றில் கடந்த 21-ம் தேதி மீன்பிடிக்கச் சென்ற 5 மீனவர்களை கடந்த 23-ம் தேதி இலங்கை கடற்படையினர் பிடித்துச் சென்ற மேலும் ஒரு சம்பவம் குறித்து பிரதமரின் கவனத்திற்கு கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
மீனவர்கள் சென்ற படகு, இயந்திர கோளாறு காரணமாக காற்றில் அடித்துச் செல்லப்பட்டு, இலங்கையைச் சேர்ந்த வல்வெட்டித்துறையில் கரை ஒதுங்கியதையடுத்து, 5 மீனவர்களும் கைது செய்யப்பட்டு, இலங்கை அரசின் காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர் - அவர்களின் படகும் சிறைபிடிக்கப்பட்டுள்ளது - கடலில் துன்பத்திற்கு ஆளான மீனவர்களை கைது செய்திருப்பது, மனிதாபிமானமற்ற செயலாக தோன்றுகிறது என முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தைச் சேர்ந்த 24 மீனவர்களும், 93 மீன்பிடி படகுகளும் இலங்கையில் சிறைபிடிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்காத இலங்கை அரசின் தந்திரம், தமிழக மீனவர்களிடையே பெரும் அதிருப்தியையும், விரக்தியையும் ஏற்படுத்தியுள்ளது - இந்த பிரச்சினை குறித்து இலங்கை அரசின் உயர்மட்ட அதிகாரிகளிடம் கொண்டு சென்று, பராமரிப்பின்றி கிடக்கும் படகுகளை உடனடியாக விடுவிக்க பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துவதாக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
தமிழக மீனவர்களின் பாரம்பரிய கடற்பகுதியான பாக் நீரிணையில் அமைதியாக மீன்பிடிக்கும் வரலாற்று ரீதியிலான உரிமையை மறுப்பது தமிழக மீனவர்களின் மனங்களில் பெரும் சஞ்சலத்தை ஏற்படுத்தியுள்ளது - 1974 மற்றும் 1976-ம் ஆண்டுகளில் இந்தியா - இலங்கை இடையே செய்துக் கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களை ரத்து செய்து, பாக் நீரிணையில் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்கும் பாரம்பரிய உரிமைகளை மீட்டெடுக்க வேண்டும் என தமிழக அரசு தீவிரமாக வலியுறுத்துகிறது - இந்த ஒப்பந்தங்களின் செல்லத்தக்க தன்மை குறித்து தாமும், பின்னர் தமிழக அரசும் உச்சநீதிமன்றத்தில் ஆதாரப்பூர்வமான சட்ட விதிகளின் அடிப்படையில் வழக்கு தொடர்ந்துள்ளதை முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா சுட்டிக்காட்டியுள்ளார்.
பிரதமர் இப்பிரச்சினையில் நேரடியாக தலையிட்டு, கடந்த 23-ம் தேதி இயந்திர படகில் சென்ற 5 மீனவர்கள் உட்பட இலங்கையில் உள்ள 29 மீனவர்களையும், அந்நாட்டின் வசமிருக்கும் 94 மீன்பிடி படகுகளையும் விரைந்து மீட்க வேண்டுமென தாம் மீண்டும் கேட்டுக் கொள்வதாக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
இலங்கையில் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது படகுகளையும் உடனடியாக விடுவிக்க வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு பிரதமர் உத்தரவிட வேண்டுமென கேட்டுக் கொள்வதாக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.