தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ராஜினாமா : சட்டமன்றத் தேர்தலில் பணம் பெற்றுக்கொண்டு வேட்பாளர்களை நிறுத்தியது - மகளிர் அணியினரை கொச்சைப்படுத்தி பேசியது உள்ளிட்ட அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து காங்கிரஸ் மேலிடம் அதிரடி நடவடிக்கை
Jun 25 2016 10:29AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழக சட்டமன்றத் தேர்தலில், பணம் பெற்றுக் கொண்டு வேட்பாளர்களை நிறுத்தியது, மகளிர் அணியினரை தரக்குறைவாக விமர்சித்தது உள்ளிட்ட அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை, ராஜினாமா செய்ய மேலிடம் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து, மேலிட கட்டளைக்குப் பணித்து, தனது ராஜினாமா கடிதத்தை இளங்கோவன் அனுப்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழக காங்கிரஸ் தலைவராக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நியமிக்கப்பட்டதில் இருந்தே, காங்கிரஸ் கட்சிக்குள் கோஷ்டி பூசல் மேலும் அதிகரித்தது. காங்கிரஸ் கட்சியில் உள்ள மகளிர் அணியினரை தரக்குறைவாக பேசியது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் இளங்கோவன் மீது கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில், அண்மையில் நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில், காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு உள்ள தொகுதிகளை தி.மு.க.விடமிருந்து வலியுறுத்தி பெறாதது - பணம் பெற்றுக் கொண்டு காங்கிரஸ் வேட்பாளர்களை நிறுத்தியது உள்ளிட்ட பல்வேறு புகார்கள் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மீது, அக்கட்சியினர் எழுப்பியிருந்தனர். காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு இளங்கோவனின் அணுகு முறைதான் காரணம் என அக்கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. விஷ்ணுபிரசாத் உள்ளிட்டோர் பகிரங்கமாக அறிக்கை வெளியிட்டிருந்தனர்.
இதைத்தொடர்ந்து, காங்கிரஸ் மேலிடம் இந்த புகார் குறித்து, கட்சியினரிடம் விசாரித்து உண்மையை அறிந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், உடனடியாக ராஜினாமா செய்யுறுமாறு ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு கட்சி மேலிடம் கட்டளையிட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, சில தினங்களுக்கு முன், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தனது ராஜினாமா கடிதத்தை காங்கிரஸ் தலைமைக்கு அனுப்பிவைத்திருப்பதாக காங்கிரஸ் வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.