நாகை மாவட்டத்தில், ஒட்டு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, ஒரே மாமரத்தில் 30 வகையான மாங்கனிகளை உருவாக்கி, இயற்கை வேளாண் விவசாயி சாதனை படைத்துள்ளார்.
Sep 2 2016 1:01PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாகை மாவட்டம் பிரதாபராமபுரத்தைச் சேர்ந்தவர் லோகநாதன். விவசாயியான இவர், ஒரே மா மரத்தில், ருமானி, மல்கோவா, கிளி மூக்கு, அல்போன்சா, நீலம், பங்கனபள்ளி, செந்தூரா உள்ளிட்ட 30 வகையான மாங்கனிகளை ஒட்டு முறை மூலமாக பயிர் செய்து சாதனை படைத்துள்ளார். சாதாரணமாக 30 வகையான மாங்காய்களை பயிர் செய்ய ஒரு ஏக்கர் அளவுக்கு இடம் தேவைப்படும். ஆனால் ஒரே மரத்தில் 30 வகையான மாங்காய்கள் உற்பத்தி செய்யப்படுவதால், உற்பத்திக்குத் தேவையான பரப்பளவு வெகுவாக குறைகிறது. பொதுவாக மா மரங்கள் மார்ச், ஏப்ரல், மே ஆகிய மாதங்களில் காய்ப்பது வழக்கம். ஆனால் இயற்கை உரங்களைக் கொண்டு, ஒட்டு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பயிரிடப்படும் இவ்வகை மாமரங்கள் ஆண்டு முழுவதும் காய்க்கும் திறன் படைத்ததாகும். மேலும் ஒரே மரத்தில் 100 வகையான மாங்கனிகளை, ஒட்டு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பயிர் செய்ய இருப்பதாகவும், ஓராண்டிற்குள் இச்சாதனையை எட்ட இருப்பதாகவும் விவசாயி தெரிவித்தார்.
மேலும், வேப்பமரங்களை ஒட்டு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்திய வரைபடம் உள்ளிட்ட வடிவங்களில் வளர்த்து வருகிறார். ஒரே பூச்செடியில் 2 வண்ண மலர்கள், காட்டு மரத்தில் நெல்லிக்காய் உற்பத்தி என இவருடைய சாதனை முயற்சி நீண்டு கொண்டே செல்கிறது. இவருடைய இந்த சாதனையை சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் ஏராளமானோர் பார்த்து வியந்து செல்கின்றனர்.
===