தமிழக சட்டமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றிபெற்று, 6வது முறையாக முதலமைச்சராக பதவியேற்றுள்ள முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு, இலங்கை வடமாகாண முதலமைச்சர், நீதியரசர் திரு. விக்னேஸ்வரன், வாழ்த்தும் பாராட்டும் தெரிவித்துள்ளார். இலங்கை தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்காகவும், பாதுகாப்புக்காகவும், கொள்கை பிறழாமல், துணிச்சலாக குரல் கொடுத்து வரும் தலைவர் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா என்றும், தமிழகத்தில் வாழும் இலங்கை தமிழ் மக்களை, மனம்கோணாமல் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா பராமரித்து வருவதாகவும் அவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இலங்கை யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற வடமாகாண சபை கூட்டத்தில் உரையாற்றிய, வடமாகாண முதலமைச்சர், நீதியரசர் திரு. விக்னேஸ்வரன், தமிழகத்தில் முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அமோக வெற்றி பெற்று, ஆறாவது முறையாக முதலமைச்சராகப் பதவியேற்றுள்ளது தனக்கு மட்டற்ற மகிழ்ச்சியைத் தருவதாக தெரிவித்தார். இதற்காக, இலங்கை வட மாகாணத்தைச் சேர்ந்த அனைவர் சார்பிலும் மனமார்ந்த பாராட்டுதல்களை தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், பெருமைக்கும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா இதுவரை ஆற்றிய சேவை, தமிழக மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு, அவர்களால் அங்கீகரிக்கப்பட்டிருப்பதே இந்த வெற்றிக்கு காரணம் என்றும் திரு. விக்னேஸ்வரன் தெரிவித்தார். முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் இந்த வெற்றியால், இலங்கையில் உள்ள தமிழ் மக்கள் மனமகிழ்ச்சியும், நம்பிக்கையும், தைரியமும் அடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். இலங்கை தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்காகவும், அவர்களின் பாதுகாப்பிற்காகவும், கொள்கை பிறழாமல், துணிச்சலாக குரல் கொடுத்து வருபவர் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா என்றும் திரு. விக்னேஸ்வரன் பாராட்டு தெரிவித்தார்.
அஞ்சாமை, ஈகை, அறிவு, ஊக்கம் இந் நான்கும்
எஞ்சாமை வேந்தர்க்கு இயல்பு
என்ற வள்ளுவனின் கூற்றுக்கிணங்க, இந்த நான்கு பண்புகளும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் ஆட்சியில் குறைவில்லாமல் இருந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
மனிதாபிமானம் நிறைந்த முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, இலங்கையில், தமிழ் பேசும் மக்களின் அரசியல், சமூக, பொருளாதார பிரச்சனைகளை வென்றெடுக்க, உறுதுணையாக இருப்பார் என்று தாங்கள் மிகுந்த எதிர்பார்ப்புடனும், நம்பிக்கையுடனும் இருப்பதாக திரு. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்து, தமிழகத்தில் வாழும் இலங்கை தமிழ் மக்களை, இன்றுவரை மனம்கோணாமல் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா பராமரித்து வருவதாகவும் அவர் பாராட்டு தெரிவித்தார். 13வது சட்ட திருத்த உடன்படிக்கையில் கையெழுத்திட்ட இந்திய அரசாங்கத்திற்கு, தற்போதைய இலங்கை தமிழ் மக்களின் நிலைமையை எடுத்துக்கூறக்கூடிய ஒரே தலைவர் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாதான் என்றும், இந்த சட்ட திருத்தத்தின் மூலம், இலங்கை தமிழர்கள் ஒரு சுமுகமான தீர்வைப் பெற முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உந்து சக்தியாக இருப்பார் என்றும் திரு. விக்னேஸ்வரன் உறுதிபட தெரிவித்துள்ளார்.