அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதிகளில் சட்டத்திற்கு புறம்பாக தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது குறித்து அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர்கள் ஆளுநரிடம் முறையீடு - வரும் 1ம் தேதிக்கு முன்பாக இந்தத் தொகுதிகளில் தேர்தல் நடத்த பரிந்துரை செய்து தலைமைத் தேர்தல் ஆணையருக்கு ஆளுநர் கடிதம்
May 27 2016 5:37AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூர் தொகுதிகளில் சட்டத்திற்கு புறம்பாகவும், ஆளுநரின் ஒப்புதல் பெறாமலும் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது குறித்து அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர்கள் ஆளுநரிடம் முறையிட்டதைத் தொடர்ந்து, இந்த தொகுதிகளில் வரும் 1ம் தேதிக்கு முன்பாக, தேர்தல் நடத்த பரிந்துரை செய்து, ஆளுநர் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.
அரவக்குறிச்சி தொகுதி அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர் திரு.வி.செந்தில்பாலாஜி மற்றும் தஞ்சாவூர் தொகுதி அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர் திரு.எம்.ரங்கசாமி ஆகியோர் கடந்த 22ம் தேதி, தமிழக ஆளுநர் டாக்டர் கே.ரோசய்யாவை சந்தித்து, மனு அளித்தனர். தங்கள் தொகுதிகளில் சட்டத்திற்கு புறம்பாகவும், ஆளுநரின் ஒப்புதல் பெறாமலும் தேர்தல் ஆணையம் தேர்தலை ஒத்திவைத்துள்ளதாக அந்த மனுவில் தெரிவித்துள்ளனர். தேர்தலை ஒத்திவைக்க தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ள முறைகேடுகளை நீதிமன்றத்தில் தீர்மானித்திருக்க முடியும் - மாறாக, தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டதால், இந்த தொகுதிகளில் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களின் பதவிக்காலமும் குறைக்கப்பட்டுள்ளது என அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.
இந்த மனுக்கள் தொடர்பாக, கடந்த 23ம் தேதி தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரியுடன் ஆளுநர் டாக்டர் கே. ரோசய்யா ஆலோசனை நடத்தினார் - அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிக்கையை கடந்த 24ம் தேதி ஆளுநரிடம் அளித்தார் - இவற்றை ஆளுநர் முழுமையாக ஆய்வு செய்தார் - மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் மற்றும் 1996ம் ஆண்டு தேர்தல் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு மற்றும் 1984ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு அளித்த தீர்ப்பு ஆகியவற்றையும் கருத்தில் கொண்டும், அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூர் தொகுதிகளில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதால், அந்த தொகுதிகளில் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்தலில் வாக்களிக்கும் சட்டப்படியான உரிமைகளை இழக்க நேரிடும் என்பதை கருத்தில் கொண்டும், தலைமைத் தேர்தல் ஆணையருக்கு தமிழக ஆளுநர் கடிதம் எழுதியுள்ளார்.
அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூர் சட்டமன்றத் தொகுதிகளில், வரும் ஜுன் 1ம் தேதிக்கு முன்பாக தேர்தல் நடத்த அந்த கடிதத்தில் ஆளுநர் டாக்டர் கே. ரோசய்யா பரிந்துரை செய்துள்ளார் என ஆளுநர் மாளிகை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.