தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. விருதுநகரைச் சேர்ந்த ஆர். சிவக்குமார், ராசிப்புரத்தைச் சேர்ந்த ஆர். பிரேம சுதா ஆகிய 2 பேர், 500-க்கு 499 மதிப்பெண்கள் பெற்று, முதலிடத்தைப் பெற்றுள்ளனர். 498 மதிப்பெண்கள் பெற்று 2-ம் இடத்தை 50 பேரும், 497 மதிப்பெண்கள் பெற்று, 3-ம் இடத்தை 224 மாணவ - மாணவிகளும் பெற்று சாதனை நிகழ்த்தியுள்ளனர். முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, பள்ளிக் கல்வித்துறையில் செயல்படுத்தி வரும் பல்வேறு நலத்திட்டங்களால், இந்த ஆண்டும் அதிக எண்ணிக்கையில் மாணவ - மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில், கடந்த மார்ச் மாதம் 15-ம் தேதி தொடங்கிய 10-ம் வகுப்பு தேர்வு, ஏப்ரல் மாதம் 13-ம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தேர்வினை, 10 லட்சத்து 72 ஆயிரத்து 225 மாணவ - மாணவிகள் எழுதினர். விடைத்தாள்களை திருத்தும் பணி நிறைவடைந்ததை அடுத்து, இன்று தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.
கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் அதிகரித்து, 93.6 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில், மாணவிகள் 95.9 சதவீதமும், மாணவர்கள் 91.3 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
விருதுநகர் பெரியவள்ளிக்குளத்தைச் சேர்ந்த மாணவன் ஆர். சிவக்குமார், ராசிபுரம் குறுக்கப்புரத்தைச் சேர்ந்த மாணவி ஆர்.பிரேம சுதா ஆகிய 2 பேர் 499 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தைப் பெற்றுள்ளனர்.
498 மதிப்பெண்கள் பெற்று, 2-வது இடத்தை 50 மாணவ - மாணவியர்கள் பெற்றுள்ளனர்.
497 மதிப்பெண்கள் பெற்று 3-வது இடத்தை 224 மாணவ - மாணவிகள் பெற்றுள்ளனர்.
முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, பள்ளிக் கல்வித்துறையில் செயல்படுத்தி வரும் பல்வேறு நலத்திட்டங்களால், இந்த ஆண்டும் அதிக எண்ணிக்கையில் மாணவ - மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்ச்சி சதவீதம்
தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, பள்ளிக்கல்வித்துறைக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து, பல்வேறு சிறப்புத் திட்டங்களை செயல்படுத்தி வருவதால், 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில், கடந்த ஆண்டுகளைவிட தேர்ச்சி சதவீதம் கணிசமான அளவு அதிகரித்து, 93.6 சதவீதத்தை எட்டி சாதனைப் படைத்துள்ளது. மாவட்ட அளவில், ஈரோடு மாவட்டம் 98.48 சதவீத தேர்ச்சியுடன் தமிழகத்திலேயே முதலிடம் பெற்றுள்ளது.
தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, பள்ளிக் கல்வித்துறை எண்ணற்ற சிறப்புத் திட்டங்களைச் செயல்படுத்தியதாலும், கற்றல் கையேடுகள் உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டுதல்களாலும், தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில், கடந்த 2013-ம் ஆண்டு 89 சதவீதமாக இருந்த தேர்ச்சி விகிதம், 2014-ல் 90.7 ஆகி அதிகரித்தது. 2015-ம் ஆண்டில் 92.9 ஆக மேலும் தேர்ச்சி விகிதம் உயர்ந்து, இந்த ஆண்டு, 93.6 சதவீதமாக தொடர்ந்து தேர்ச்சி விகிதம் ஏறுமுகமாகஉயர்ந்து மாபெரும் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு, 10-ம் வகுப்பு பொதுத் தேர்வை பள்ளிகள் மூலமாக 10 லட்சத்து 11 ஆயிரத்து 919 மாணவ - மாணவிகள் எழுதினர். இதில், 7 லட்சத்து 33 ஆயிரத்து 637 மாணவ - மாணவிகள் 60 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் பெற்று சாதனைப் படைத்துள்ளனர்.
இதேபோல், பல்வேறு பாடங்களில், நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்று மாணவ - மாணவிகள் சாதனை நிகழ்த்தியுள்ளனர்.
மொழிப் பாடத்தில் 73 பேரும், ஆங்கிலத்தில் 51 பேரும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் எடுத்துள்ளனர்.
கணிதப் பாடத்தில் 18,754 பேரும், அறிவியலில் 18,642 பேரும், சமூக அறிவியலில் 39,398 பேரும் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
மாவட்ட அளவிலான தேர்ச்சி விகிதத்தில், ஈரோடு மாவட்டம் 98.48 சதவீத தேர்ச்சியுடன் தமிழகத்திலேயே முதலிடம் பெற்றுள்ளது. 98.17 சதவீத தேர்ச்சியுடன் கன்னியாகுமரி மாவட்டம் 2-வது இடமும், 97.1 சதவீத தேர்ச்சியுடன்ராமநாதபுரம் மாவட்டம் 3-ம் இடமும் பெற்று சாதனை படைத்துள்ளன.
அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவ - மாணவிகள் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி சதவீதம் கணிசமான அளவு அதிகரித்துள்ளது. மாநகராட்சி பள்ளிகளில் 94.41 சதவீத பேரும், அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் 93.87 சதவீத பேரும், நகராட்சிப் பள்ளிகளில் 90.58 சதவீத பேரும், அரசுப் பள்ளிகளில் 90.21 சதவீத பேரும் தேர்ச்சி பெற்று சாதனை நிகழ்த்தியுள்ளனர்.
மறு கூட்டல்
தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, மறு கூட்டலுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்றும், தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் வரும் 1-ம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
10-ம் வகுப்புத் தேர்வில், மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவ - மாணவிகள், இன்று முதல், வரும் 28-ம் தேதி வரை, தாங்கள் பயின்ற பள்ளிகள் மூலமாக விண்ணப்பிக்கலாம் என, அரசுத் தேர்வுகள் இயக்ககம் ஏற்கனவே அறிவித்துள்ளது. மேலும், தேர்வர்கள், தங்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை, வரும் 1-ம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும், பிறந்த தேதி, பதிவெண் ஆகிய விவரங்களைப் பதிந்து, dge.tn.nic.in என்ற இணையதளத்திலிருந்து, தாங்களே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
10-ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெறாத மற்றும்பல்வேறு காரணங்களால் தேர்வு எழுத இயலாதவர்களுக்கு, ஜூன் மாத இறுதியில் சிறப்பு துணைத் தேர்வு நடைபெறவுள்ளதாகவும், இதற்கு விண்ணப்பிப்பதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் குறிப்பிட்டுள்ளது.
அரசுப் பள்ளிகள்
முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, கல்வி மேம்பாட்டுக்காக மேற்கொண்ட சிறப்பு நடவடிக்கைகளின் பயனாக, 10-ம் வகுப்புத் தேர்வில், மாநகராட்சி, நகராட்சி மற்றும் அரசுப் பள்ளி மாணவ - மாணவிகள் அதிக மதிப்பெண்கள் பெற்று, அதிக அளவில் தேர்ச்சி பெற்று வருவது, ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.
தமிழகத்தில் அனைத்து மாணவ - மாணவியரும், கல்வியில் சிறந்து விளங்கிடவும், சமுதாயத்தில் உயர்ந்த நிலையை எய்திடவும், கல்வி கற்பதற்கு வறுமை ஒரு தடவையாக இருக்கக் கூடாது என்ற உயரிய நோக்கிலும், தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ. ஜெயலலிதா, மாணவ - மாணவியருக்கு, விலையில்லா பாடப் புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், 4 செட் சீருடைகள், புத்தகப் பைகள், காலணிகள், கணித உபகரணப் பெட்டிகள், வரைப்பட புத்தகங்கள், வண்ணப்பென்சில்கள், கிரயான் பென்சில்கள், பேருந்து பயண சலுகை, பள்ளி இடைநிற்றலைத் தடுக்க சிறப்பு ஊக்கத் தொகை உள்ளிட்ட பல்வேறு சிறப்புத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் 95 சதவீத பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டைவிட 3 சதவீதம் பேர் அதிக அளவில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். 450-க்கு மேல் மதிப்பெண்கள் பெற்று, 250 பேர் சாதனை நிகழ்த்தியுள்ளனர். 400-க்கு மேல் மதிப்பெண்கள் பெற்று, ஆயிரத்து 149 பேர் சாதனைப் படைத்துள்ளனர். 19 மாநகராட்சி பள்ளிகளில் நூறு சதவீத தேர்ச்சி அடைந்துள்ளது.