தமிழக சட்டமன்றத் தேர்தல் குறித்து கருத்துக் கணிப்பு என்ற போர்வையில், கருத்து திணிப்பை தனியார் தொலைக்காட்சியுடன் சேர்ந்து தினமலர் நாளிதழின் சென்னை பதிப்பு திட்டமிட்டு பரப்புவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்தக் கருத்துக் கணிப்புக்கும், தங்களுக்கும் தொடர்பு இல்லை என ஈரோடு, சேலம் மற்றும் இதர தினமலர் நாளேடுகள் மறுப்பு தெரிவித்துள்ளன.
தமிழகத்தில், வரும் 16-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. வரலாற்றில் முதல் முறையாக இந்தத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் எம்.ஜி.ஆரின் வெற்றி சின்னமான இரட்டை இலை சின்னத்தில் அ.இ.அ.தி.மு.க. களமிறங்கியுள்ளது. முதலமைச்சர் செல்வி ஜெ. ஜெயலலிதா தலைமையிலான அ.இ.அ.தி.மு.க.வுக்கு மக்களிடையே அமோக ஆதரவு பெருகியுள்ள நிலையில், அதனைக் கண்டு அச்சமடைந்துள்ள எதிர்க்கட்சிகள், கருத்துக் கணிப்பு என்ற பெயரில், கருத்து திணிப்பை தொடர்ச்சியாக அரங்கேற்றி வருகின்றன.
அந்த வரிசையில், தற்போது தனியார் தொலைக்காட்சி ஒன்றுடன் இணைந்து, தினமலர் நாளிதழ் சென்னை பதிப்பு, கருத்துக் கணிப்பு என்ற பெயரில் வெளியிட்டு வரும் கருத்து திணிப்புக்கு, தினமலர் நாளிதழின் இதர பதிப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
உண்மைக்கு மாறாக, கருத்துக் கணிப்பு என்ற பெயரில் தினமலர் நாளிதழ் பெயரையும் சேர்த்து வெளியிடுகிறார்களே, அப்படி தங்களிடம் எந்த கருத்துக் கணிப்பும் நடத்தவில்லையே என, நெல்லை, நாகர்கோவில், வேலூர், சேலம், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்களும், வாசகர்களும், ஈரோடு, சேலம் உள்ளிட்ட தினமலர் பதிப்புகளுக்கு தொலைபேசி வாயிலாக, கடந்த 2 நாட்களாக கேட்டு வருவதாகவும், இதனால் மிகப்பெரிய அவப்பெயர் ஏற்பட்டுள்ளதாகவும் இந்தப் பதிப்புகளின் நிர்வாக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த கருத்துக் கணிப்புக்கும், தங்களுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்ற அறிவிப்பும் தினமலர் நாளிதழ் இந்தப் பதிப்புகளின் முதல் பக்கத்திலேயே முக்கிய அறிவிப்பாக வெளியிடப்பட்டுள்ளது.
இப்படியொரு அறிவிப்பு, தினமலர் நாளிதழ் சென்னை பதிப்பு வெளியிடும் கருத்துக் கணிப்பு முற்றிலும் செயற்கையானது, போலியானது என தெரிய வந்துள்ளது. மேலும், இந்த கருத்துக்கணிப்பு, தி.மு.க.வினரிடமிருந்து ஆதாயம் பெற்று அரங்கேற்றப்பட்டிருப்பதாக சமூக ஆர்வலர்களும், பத்திரிகையாளர்களும் தெரிவிக்கின்றனர்.