தமிழகத்தில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தேர்தல் ஆணையம் மேற்கொண்ட நடவடிக்கையை தவறான வழியில் பயன்படுத்தி, சட்டமன்றத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க.வுக்கு எதிராக பிரச்சாரம் செய்யவும், இதன் மூலம் அரசியல் ஆதாயம் தேடவும் தி.மு.க. தலைவர் கருணாநிதி முயற்சி மேற்கொண்டுள்ளதாக, தலைமைத் தேர்தல் ஆணையரிடம் அ.இ.அ.தி.மு.க. புகார் அளித்துள்ளது. மேலும், தேர்தல் ஆணைய நடவடிக்கையை அரசியலாக்கி, தமிழகத்தில் தேர்தல் தொடர்பான பணிகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளை அச்சுறுத்தவும், மிரட்டவும் கருணாநிதி முயற்சிப்பதாகவும், இதன் மூலம், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியுள்ள கருணாநிதி மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அ.இ.அ.தி.மு.க. வலியுறுத்தியுள்ளது.
அ.இ.அ.தி.மு.க. கொள்கை பரப்புச் செயலாளர் டாக்டர் மு. தம்பிதுரை, நாடாளுமன்றக் குழு தலைவர் டாக்டர் P. வேணுகோபால், நாடாளுமன்றக் குழு துணைத் தலைவர் திரு. A. நவநீதகிருஷ்ணன் மற்றும் அ.இ.அ.தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள், தலைமைத் தேர்தல் ஆணையர் டாக்டர் நசிம் ஜைதிக்கு புகார் மனு அனுப்பியுள்ளனர். தி.மு.க., காங்கிரஸ் கட்சியினர் உள்நோக்கத்துடன் தேர்தல் ஆணையத்திடம் கொடுத்த மனுவின் அடிப்படையில் தமிழகத்தில் செயல்படும் அதிகாரிகளை அதிக எண்ணிக்கையில் தேர்தல் ஆணையம் இடமாற்றம் செய்ததற்கு கடும் ஆட்சேபம் தெரிவித்து, அ.இ.அ.தி.மு.க. சார்பில், நேற்று அளிக்கப்பட்ட மனுவின் தொடர்ச்சியாக இந்த மனுவை அளிப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக உள்நோக்கத்துடன் தி.மு.க. அளித்த மனுக்களை அடிப்படையாகக் கொண்டு, தேர்தல் ஆணையம் அதிக எண்ணிக்கையில் அதிகாரிகளை இடமாற்றம் செய்ததை திரித்துக்கூறி, அரசியல் ஆதாயம் தேட தி.மு.க. முயற்சிப்பதை தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு கொண்டுவருவதாக, அ.இ.அ.தி.மு.க. எம்.பி.க்கள் தெரிவித்துள்ளனர். தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கை குறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி, அவரது கட்சி பத்திரிகையில் திரித்துக் கூறிய கருத்தை இந்த மனுவில் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்பேரில், தேர்தல் தொடர்பான பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டதை அரசியல் ஆதாயத்திற்காக கருணாநிதி தவறாகவும், முறைகேடாகவும் பயன்படுத்தியுள்ளது இதன் மூலம் தெரியவந்துள்ளதாக அ.இ.அ.தி.மு.க. மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்தல் அதிகாரிகளின் செயல்பாடுகள் குறித்து திட்டமிட்ட பொய்ப் பிரச்சாரத்தை கட்டவிழ்த்துவிட்ட தி.மு.க., தற்போது அதிகாரிகள் பணியிடமாற்ற பிரச்சினையை அரசியல் ஆதாயத்திற்கு பயன்படுத்தி வருவதும் வெளிப்படையாகிவிட்டது - தேர்தல் ஆணையத்தால், உயரதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டதை, கருணாநிதி அரசியல் உள்நோக்கத்துடன், அ.இ.அ.தி.மு.க.வுக்கு எதிரான அரசியல் பிரச்சாரமாக பயன்படுத்தி வருகிறார் - பெருமளவிலான அதிகாரிகளின் பணியிட மாற்றம், தி.மு.க.வால் உள்நோக்கத்துடன் பிரச்னையாக்கப்பட்டு, அரசியல் பிரச்சாரக் களத்தில் அ.இ.அ.தி.மு.க.வுக்கு எதிராக பயன்படுத்தப்படுகிறது - கருணாநிதியின் இத்தகைய கருத்துக்கள், உயர் அதிகாரிகளுக்கு எதிராக மிக மோசமான அச்சுறுத்தலை ஏற்படுத்துவதுடன், தமிழகத்தில் தேர்தல் தொடர்பான பணிகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளை மிரட்டும் வகையிலும் அமைந்துள்ளது - கருணாநிதியின் இந்த நடவடிக்கை, தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிரான செயல் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, தேர்தல் ஆணையத்தால் ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்ட உயர் அதிகாரிகள் பணியிட மாற்ற உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என்ற தங்களது கோரிக்கைகளை மீண்டும் வலியுறுத்துவதாகவும் அ.இ.அ.தி.மு.க. மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் பணியிட மாற்ற நடவடிக்கையை அரசியல் பிரச்னையாக தவறாகப் பயன்படுத்துவதுடன், அதிகாரிகளை அச்சுறுத்தும் வாய்ப்பாகவும் உபயோகித்து, தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியுள்ள தி.மு.க. தலைவர் கருணாநிதி மீது, தேர்தல் ஆணையம் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அ.இ.அ.தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள், அந்த மனுவில் வலியுறுத்தியுள்ளனர்.