தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மாநிலம் முழுவதும் நடைபெற்றுவரும் அ.இ.அ.தி.மு.க. தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்களையும், வரலாற்று சாதனைகளையும் பொதுமக்களிடம் எடுத்துரைத்து கழக நட்சத்திரப் பேச்சாளர்கள் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்து வருகின்றனர்.
அரியலூர் தொகுதி அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர் திரு. தாமரை எஸ். ராஜேந்திரனை ஆதரித்து, திருமானூரில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று உரையாற்றிய கழக நட்சத்திரப் பேச்சாளர் திரு. நாஞ்சில் சம்பத், தி.மு.கவின் விஷமப் பிரச்சாரங்களுக்கு பதிலடி கொடுத்ததுடன், அரியலூர் மாவட்டத்தில் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா நிறைவேற்றியுள்ள மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சிப்பணிகள் உள்ளிட்ட சாதனைகளை விளக்கமாக எடுத்துரைத்தும் வாக்கு சேகரித்தார்.
அரவக்குறிச்சி பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், அ.இ.அ.தி.மு.க. நட்சத்திரப் பேச்சாளர் நடிகை விந்தியா கலந்துகொண்டு அரவக்குறிச்சி தொகுதி கழக வேட்பாளர் திரு. வி. செந்தில்பாலாஜியை ஆதரித்து வாக்கு சேகரித்தார். அப்போது, ஏழை-எளியோர், மாணவ-மாணவியருக்கென முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா செயல்படுத்திவரும் நலத்திட்டங்களை விளக்கி, இரட்டை இலை சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார்.
இதனிடையே, தேர்தல் பணி தொடர்பாக காஞ்சிபுரம் கிழக்கு மாவட்டக் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், பல்லாவரத்தில் நடைபெற்றது. இதில், பல்லாவரம் தொகுதி கழக வேட்பாளர் செல்வி சி.ஆர். சரஸ்வதி, மாவட்டக் கழகச் செயலாளரும், தாம்பரம் தொகுதி கழக வேட்பாளருமான திரு. சிட்லபாக்கம் எஸ். ராஜேந்திரன் மற்றும் கழக நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்று ஆலோசனை வழங்கினர்.
கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு, கிள்ளியூர் தொகுதிகள் சார்பில், மார்த்தாண்டம், தேங்காய்பட்டணம் ஆகிய இடங்களில் அ.இ.அ.தி.மு.க. செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்றன. இதில், முதலமைச்சரின் சரித்திர சாதனகளை வீடுவீடாக எடுத்துக்கூறி வாக்கு சேகரிக்க அமைக்கப்பட்டுள்ள குழுக்களின் பணிகளை தீவிரப்படுத்த தீர்மானிக்கப்பட்டது. இக்கூட்டங்களில், விளவங்கோடு தொகுதி கழக வேட்பாளர் திரு. நாஞ்சில் ஜி. டொமினிக், கிள்ளியூர் தொகுதி கழக வேட்பாளர் திருமதி மேரி கமலாபாய் மற்றும் கழக நிர்வாகிகள் திரளானோர் கலந்துகொண்டனர்.
நெல்லை புறநகர் மாவட்ட கழகம் சார்பில் ராதாபுரம் சட்டமன்றத் தொகுதி கழக செயல்வீரர்-வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், வரும் சட்டமன்றப் பேரவைத் தேர்தலில் அ.இ.அ.தி.மு.க. அமோக வெற்றிபெற்று முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் நல்லாட்சி தொடர்ந்திட தொண்டர்கள் அரும்பணியாற்றிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில், ராதாபுரம் தொகுதி கழக வேட்பாளர் திரு. இன்பதுரை மற்றும் கழக நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.