வேலூரில் விண்கல் விழுந்து விபத்து ஏற்பட்டதில் உயிரிழந்த கல்லூரி பேருந்து ஓட்டுநர் குடும்பத்திற்கு, முதலமைச்சர் ஜெயலலிதா ஆழ்ந்த இரங்கல் : ஓட்டுநரின் குடும்பத்திற்கு ஒரு லட்சம் ரூபாயும், விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தலா 25 ஆயிரம் ரூபாயும் வழங்க உத்தரவு
Feb 7 2016 1:42PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வேலூர் மாவட்டத்தில் விண்கல் விழுந்து விபத்து ஏற்பட்டதில் உயிரிழந்த கல்லூரி பேருந்து ஓட்டுநர் குடும்பத்திற்கு, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். ஓட்டுநரின் குடும்பத்திற்கு ஒரு லட்சம் ரூபாயும், விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தலா 25 ஆயிரம் ரூபாயும் வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், வேலூர் மாவட்டம், நாட்றாம்பள்ளி வட்டம், கே.பந்தாரப்பள்ளி கிராமத்தில் இயங்கி வரும் தனியார் பொறியியல் கல்லூரி வளாகத்தில் நேற்றுவிண்கல் ஒன்று விழுந்து விபத்து ஏற்பட்டதில், அந்தக் கல்லூரியின் பேருந்து ஓட்டுநர் திரு. காமராஜ் என்பவர் பலத்த காயமடைந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து தாம் மிகவும் துயரம் அடைந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த திரு. காமராஜின் குடும்பத்திற்கு தமது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்த விபத்தில், அந்தக் கல்லூரியில் தோட்ட பராமரிப்பாளர்களாக பணியாற்றி வரும் திரு. சசிகுமார், திரு. முரளி மற்றும் மாணவர் திரு. சந்தோஷ் ஆகியோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்ற செய்தியை அறிந்து தாம் மிகவும் வருத்தமடைந்ததாகவும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருபவர்களுக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்க வேலூர் மாவட்ட நிருவாகத்திற்கும், மருத்துவமனை அதிகாரிகளுக்கும் தாம் உத்தரவிட்டுள்ளதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
விபத்தில் உயிரிழந்த திரு. காமராஜின் குடும்பத்திற்கு ஒரு லட்சம் ரூபாயும், காயமடைந்த திரு. சசிகுமார், திரு. முரளி மற்றும் மாணவர் திரு. சந்தோஷ் ஆகியோருக்கு தலா 25 ஆயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க தாம் உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.