மதுரை மாவட்டத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் 13 பேர் உயிரிழந்தது குறித்து, முதலமைச்சர் ஜெயலலிதா ஆழ்ந்த இரங்கல் : உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் - பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் நிதியுதவி வழங்கவும் உத்தரவு
Feb 7 2016 6:39AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மதுரை மாவட்டத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் 13 பேர் உயிரிழந்தது குறித்து, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் நிதியுதவி வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
முதலமைச்சர் செல்வி ஜெ. ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், மதுரை மாவட்டம், பேரையூர் வட்டம், சுப்புலாபுரம் கிராமம், பாறைபட்டி சோதனைச் சாவடி அருகே திருநெல்வேலியிலிருந்து குமுளி நோக்கி சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தும், கரூரிலிருந்து செங்கோட்டை சென்று கொண்டிருந்த லாரியும் மோதியதில், பேருந்தில் பயணம் செய்த 13 நபர்கள் உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து தாம் மிகவும் துயரம் அடைந்ததாக தெரிவித்துள்ளார்.
இந்த சாலை விபத்தில் அகால மரணமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு தமது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விபத்து குறித்து தமக்கு செய்தி கிடைத்தவுடன், கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு செல்லூர் கே. ராஜூ, மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோரை சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, காயமடைந்தவர்களை மீட்டு, அவர்களுக்கு உடனடி மருத்துவ சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யவும் தாம் உத்தரவிட்டுள்ளதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்த சாலை விபத்தில் 32 நபர்கள் பலத்த காயமடைந்தனர் என்ற செய்தியை அறிந்து தாம் மிகவும் வருத்தமடைந்ததாகவும், காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருபவர்களுக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்க மருத்துவமனை அதிகாரிகளுக்கும், மதுரை மாவட்ட நிருவாகத்திற்கும் தாம் உத்தரவிட்டுள்ளதாகவும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் இவர்கள் அனைவரும், விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்ற தமது விருப்பத்தைத் தெரிவித்துக் கொள்வதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க தாம் உத்தரவிட்டுள்ளதாகவும், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.