தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தலுக்காக 75 ஆயிரம் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் - 2 நாட்களில் வந்து சேரும் என தலைமைத் தேர்தல் அதிகாரி தகவல்
Feb 5 2016 2:03PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்தில் வரவிருக்கும் சட்டமன்ற பொதுத் தேர்தலுக்காக, குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து மொத்தம் 75 ஆயிரம் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டு, பயன்படுத்தப்படும் என மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி திரு. ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார். பல்வேறு பகுதிகளிலிருந்து அடுத்த ஓரிரு நாட்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்து தொகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்து, தலைமைத் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்பேரில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி திரு. ராஜேஷ் லக்கானி, பல்வேறு மாவட்டங்களின் ஆட்சித் தலைவர்கள், காவல்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். திருச்சியில் இன்று நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டத்தில், 9 மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அனைத்து தொகுதிகளுக்கும் அனுப்பிவைப்பது, அவற்றை சரிபார்ப்பது உள்ளிட்டவை குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. வாக்குச்சாவடி மையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு ஏற்பாடுகள், சுகாதார வசதிகளை ஏற்படுத்துதல், பாதுகாப்பு பணிகள் உள்ளிட்டவை குறித்தும் திரு. ராஜேஷ் லக்கானி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திரு. ராஜேஷ் லக்கானி, தமிழகம் முழுவதும் சுமார் 65 ஆயிரத்து 600 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படவுள்ளதாகவும், மொத்தம் 75 ஆயிரம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார். அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்களும் 2 நாட்களுக்குள் வரவழைக்கப்பட்டு, அவற்றை சரிபார்க்கும் பணிகள் நடைபெறும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.