வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தம் மேற்கொள்ள, தமிழகம் முழுவதும் நாளை சிறப்பு முகாம்
Feb 5 2016 1:54PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தம் மேற்கொள்ள, தமிழகம் முழுவதும் நாளை சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
ஜனவரி ஒன்றாம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம், 2016-ன் இறுதி வாக்காளர் பட்டியல் கடந்த 20-ம் தேதி வெளியிடப்பட்டது.
இந்தப் பட்டியலில் பெயர் விடுபட்டுள்ளவர்கள், தங்கள் பெயர்களைச் சேர்த்துக் கொள்ளவும், புதிதாக பெயர் சேர்க்கவும், நீக்கல், திருத்தம் மற்றும் இடம் மாற்றம் செய்யவும் கடந்த 31ம் தேதி நடைபெற்ற சிறப்பு முகாம்களில் ஏராளமானோர் பங்கேற்று விண்ணப்பித்தனர். இதில் விடுபட்டவர்கள், நாளை நடைபெறவுள்ள சிறப்பு முகாம்களில் பங்கேற்று உரிய படிவங்களைப் பெற்று பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நடைபெற உள்ள சிறப்பு முகாம்களில், வாக்காளர் பட்டியல்கள் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும். மேலும் www.elections.tn.gov.in என்ற இணையதளம் மூலமாகவும் பெயர் சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தங்கள் தொடர்பாக விண்ணப்பிக்கலாம்.
இதனிடையே, வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்களில் கழக உடன்பிறப்புகள் பங்கேற்று, வாக்காளர் பட்டியலை சரிபார்க்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு, தமது பாதையில் களப்பணியாற்றிட தொண்டர்களுக்கு முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஏற்கெனவே அன்புக்கட்டளையிட்டுள்ளார். அதன்படி, இப்பணிகளை மேற்கொள்ள அ.இ.அ.தி.மு.க. தொண்டர்கள் தயார்நிலையில் உள்ளனர்.