மதுரையில், தினகரன் அலுவலகம் அடித்து நொறுக்கப்பட்டு ஊழியர்கள் 3 பேர் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கு - குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு மீண்டும் பிடிவாரண்ட் பிறப்பித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
Feb 5 2016 11:52AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
முந்தைய மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியின்போது, மதுரை தினகரன் அலுவலகத்தில் தீ வைத்து 3 பேர் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில், பிடிவாரண்ட் பிறப்பித்தும் குற்றவாளிகளை ஆஜர்படுத்தாத சி.பி.ஐ. போலீசாரின் மெத்தனப் போக்கிற்கு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. குற்றவாளிகளை அடுத்த மாதம் 11-ம் தேதியன்று கட்டாயம் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2007-ம் ஆண்டு, கருணாநிதியின் மகன்கள் மு.க. அழகிரி, மு.க. ஸ்டாலின் குறித்து, தினகரன் நாளிதழ் கருத்துக்கணிப்பு வெளியிட்டது. அதனால், ஆத்திரமடைந்த மு.க. அழகிரியின் ஆட்கள், மதுரையில் உள்ள தினகரன் அலுவலகத்தில் அதிரடியாக நுழைந்து பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர். இதனால் பெருத்த சேதம் ஏற்பட்டதோடு, தீயில் கருகி 3 பணியாளர்கள் உயிரிழந்தனர். இதுதொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகளால், அட்டாக் பாண்டி உள்ளிட்ட மு.க. அழகிரியின் அடியாட்கள் 17 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. இவர்களில் 12 பேர் ஆஜராகாமல் காலம் தாழ்த்தியதையடுத்து, அவர்களை நேற்றைக்குள் கைது செய்து ஆஜர்படுத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை உத்தரவிட்டிருந்தது. அதன்படி, அவர்கள் ஆஜர்படுத்தப்படாததால், சி.பி.ஐ. போலீசாரின் மெத்தனப் போக்கிற்கு நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். குற்றவாளிகளை அடுத்த மாதம் 11-ம் தேதிக்குள் கைது செய்து நீதிமன்றத்தில் கட்டாயம் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.