"அம்மா சிறுவணிகக் கடன் உதவித் திட்டத்தின்" சிறப்பு முகாமின் இன்று நிறைவு நாள் : ஏராளமானோர் விண்ணப்பப் படிவங்களை அளித்து வருகின்றனர்
Feb 5 2016 11:33AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிறு வணிகர்கள், பெட்டிக்கடை நடத்துவோர், சாலையோர சிறு வியாபாரிகள் உள்ளிட்டோர் பயன்பெறும் வகையில், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தொடங்கி வைத்துள்ள, "அம்மா சிறுவணிகக் கடன் உதவித் திட்டத்தின்" சிறப்பு முகாமின் நிறைவு நாளான இன்றும், ஏராளமானோர் கலந்து கொண்டு உரிய ஆவணங்களுடன் விண்ணப்பப் படிவங்களை பூர்த்தி செய்து அளித்து வருகின்றனர்.
மிகச்சிறிய முதலீட்டில் பூக்கள், பழங்கள், காய்கறிகள் போன்ற பொருட்களை அன்றாடம் வாங்கி விற்பனை செய்து வரும் தெருவோர சிறு வணிகர்கள், பெட்டிக்கடை நடத்துவோர் போன்றோர், அண்மையில் பெய்த வரலாறு காணாத பெருமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு, முதலீட்டை இழந்து தங்களின் வாழ்வாதாரத்திற்காக தனியாரிடம் அதிக வட்டியில் கடன் பெறும் நிலை ஏற்பட்டது. இந்த நிலையை மாற்றி, ஏழை - எளிய வணிகர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை மீண்டும் பெற முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, "அம்மா சிறு வணிகக் கடனுதவித் திட்டத்தினை" கடந்த 22-ம் தேதி தொடங்கி வைத்தார். இந்தக் கடனுதவி முகாம்கள் கடந்த 2-ம் தேதியுடன் முடிவடைய இருந்த நிலையில், அனைத்து சிறு வியாபாரிகளும் முழு அளவில் பயனடையும் வகையில், கடனுதவி முகாம்களை மேலும் 3 நாட்களுக்கு, அதாவது இன்று வரை நீட்டித்து முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து, சென்னை அமைந்தகரை, கோயம்பேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், 'அம்மா சிறு வணிகக் கடனுதவித் திட்ட முகாம்கள்' இன்று நடைபெற்று வருகின்றன. இன்று கடைசி நாள் என்பதால், இந்த முகாம்களில் ஆயிரக்கணக்கான சிறு வணிகர்கள் கலந்து கொண்டு, விண்ணப்பங்களை பெற்று அவற்றினை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களை இணைத்து கூட்டுறவுத்துறை அதிகாரிகளிடம் வழங்கி வருகின்றனர்.
அவற்றினை, கூட்டுறவுத் துறை அதிகாரிகளும், ஊழியர்களும் பரிசீலினை செய்து, உடனுக்குடன் கடனுதவி வழங்குகின்றனர். இதனால், புது வாழ்வு பெற்றுள்ள சிறு வணிகர்கள், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துள்ளனர்.