விவசாயிகளின் வேண்டுகோளினை ஏற்று, டெல்டா அல்லாத பிற மாவட்டங்களில் ஏற்கெனவே செயல்பட்டுவரும் 61 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுடன், கூடுதலாக நேரடி கொள்முதல் நிலையங்களை திறக்க முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதன்மூலம் விவசாய பெருங்குடி மக்கள் மிகுந்த பயனடைவார்கள் என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், வேளாண் தொழிலை மேற்கொண்டுள்ள உழவர் பெருமக்கள் வாழ்வு வளம் பெற பல்வேறு நடவடிக்கைகளை தமது தலைமையிலான அரசு தொடர்ந்து எடுத்து வருவதாகவும், வேளாண் உற்பத்தியை பெருக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுவதோடு, விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைப்பதற்கான நடவடிக்கைகளையும் தமது அரசு எடுத்து வருவதாகவும், எனவேதான் நெல் மற்றும் கரும்பு ஆகியவற்றுக்கு மத்திய அரசு நிர்ணயிக்கும் கொள்முதல் விலையை விட அதிக விலையை தமது அரசு ஆண்டுதோறும் நிர்ணயித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அந்த அடிப்படையிலேயே, சாதாரண நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு மத்திய அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ள ஆயிரத்து 410 ரூபாயுடன், தமிழக அரசின் சார்பாக கூடுதலாக 50 ரூபாய் வழங்கப்படுகிறது - அதுபோல சன்ன ரக நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு மத்திய அரசால் நிர்ணயிக்கப்பட்ட ஆயிரத்து 450 ரூபாயுடன், தமிழக அரசின் சார்பில் கூடுதலாக 70 ரூபாய் வழங்கப்படுகிறது - அதன்படி, நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் விற்கும் விவசாயிகளுக்கு, கடந்த ஆண்டு அக்டோபர் ஒன்றாம் தேதி முதல், சாதாரண நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு ஆயிரத்து 460 ரூபாயும், சன்ன ரக நெல்லுக்கு குவிண்டால் ஒன்றுக்கு ஆயிரத்து 520 ரூபாயும் வழங்கப்பட்டு வருவதாக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
பரவலாக்கப்பட்ட கொள்முதல் திட்டத்தின் கீழ் விவசாயிகளிடமிருந்து தமிழக அரசு நெல் கொள்முதல் செய்து வருகிறது - காவிரி பாசனப் பகுதிகளில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலமாகவும், பிற மாவட்டங்களில் கூட்டுறவு சங்கங்களின் மூலமாகவும் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது - கடந்த 2014-15-ஆம் ஆண்டு முதல், டெல்டா அல்லாத மாவட்டங்களில் நெல் கொள்முதல் செய்ய தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணையம் அனுமதிக்கப்பட்டுள்ளது - காவிரி பாசன டெல்டா பகுதிகளில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலம் ஆயிரத்து 292 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன - இதுவரை 3 லட்சத்து 10 ஆயிரத்து 870 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது - இந்நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் தேவைக்கு ஏற்ப தொடர்ந்து செயல்படும் என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
டெல்டா அல்லாத பிற மாவட்டங்களில் நடப்பு பருவத்தில் இந்த ஆண்டு 28 லட்சத்து 34 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது - இந்த பகுதி விவசாயிகளின் நலன் கருதி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் மூலம் 61 நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன - இந்த மாவட்டங்களில் நேரடி கொள்முதல் நிலையங்கள் மேலும் திறக்கப்பட வேண்டுமென விவசாயப் பெருமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர் - எனவே, விவசாய பெருமக்களின் நலனை கருதி, டெல்டா அல்லாத மாவட்டங்களில் கூடுதல் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க தாம் உத்தரவிட்டுள்ளதாக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
மேலும் தேவைக்கு ஏற்ப மாவட்ட ஆட்சித் தலைவர்கள் உத்தரவின்படி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மற்றும் கூட்டுறவு சங்கங்கள் கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்களை திறந்திட தாம் உத்தரவிட்டுள்ளதாகவும், இதன் காரணமாக, விவசாயிகள் நீண்ட தூரம் பயணம் செய்யாமல், உற்பத்தி செய்யப்படும் நெல்லை, அரசு நிர்ணயித்த விலைக்கு நேரடி கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்ய இயலும் என்றும், தமது இந்த நடவடிக்கை விவசாய பெருங்குடி மக்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக அமையும் என்றும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.