தொடர்மழை காரணமாக, தமிழகம் முழுவதும் நடைபெறவிருந்த அரையாண்டுத் தேர்வுகளை ஒத்திவைத்து முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவு - ஜனவரி மாதம் முதல்வாரத்தில் தேர்வுகள் நடத்தப்படும் என்றும் அறிவிப்பு

Dec 1 2015 3:57PM
எழுத்தின் அளவு: அ + அ -

தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில், தொடர்ந்து மழை பெய்து வருவதையடுத்து, பள்ளிகளுக்கு பல நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், வரும் 7-ம் தேதி முதல் நடக்கவிருந்த அரையாண்டுத் தேர்வுகளை ஒத்தி வைக்க உத்தரவிட்டுள்ளதாகவும், இந்த தேர்வுகள், வரும் ஜனவரி மாதம், முதல் வாரத்தில் நடத்தப்படும் என்றும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அறிவித்துள்ளார். அதிக அளவில் மழைபெய்து வரும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் நிவாரணம் மற்றும் சீரமைப்புப் பணிகளை மேற்பார்வையிட்டு, அதிகாரிகளுக்கு தக்க அறிவுரை வழங்க அமைச்சர்களுக்கு ஆணையிட்டுள்ள முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, நீர்தேக்கங்கள் மற்றும் ஏரிகளிலிருந்து உபரிநீர் திறந்து விடப்படும்போது, தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்ககளை மேற்கொண்டு, தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கவும், அவர்களுக்குத் தேவையான வசதிகளை செய்துகொடுக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார். மழைவெள்ள பாதிப்புக்குள்ளாகக் கூடிய மாவட்டங்களில், நிவாரணம் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகள், ஏற்கெனவே அனுப்பப்பட்டிருப்பதாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்குவதற்கு முன்பாகவே அனைத்து துறை அதிகாரிகளும் தமது ஆணையின் பேரில் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டனர் - எனினும், ஒரு சில தினங்களில் மிக அதிக அளவு மழைப் பொழிவு ஏற்பட்டதால், சில மாவட்டங்களில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டது - இதனைத் தொடர்ந்து, பாதிப்புக்குள்ளான மாவட்டங்களில் நிவாரணம் மற்றும் சீரமைப்புப் பணிகளை உடனடியாக மேற்கொள்ள அமைச்சர்கள் மற்றும் மூத்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் கொண்ட குழுவை தாம் அனுப்பி வைத்ததாகவும், இதன் அடிப்படையில், மழையால் பாதிப்புக்குள்ளான மாவட்டங்களில் துரிதமாக சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, மாவட்டங்களில் இயல்புநிலை திரும்பியதாகத் தெரிவித்துள்ளார்.

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக நேற்று இரவு முதல் தமிழகத்தின் பல பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது - குறிப்பாக திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர் மற்றும் சென்னை மாவட்டங்களில் இன்றும் கன மழை தொடர்ந்து பெய்து வருகிறது - நேற்று தமிழகத்தில் பரங்கிப்பேட்டையில் 15 சென்டிமீட்டர், மரக்காணத்தில் 14 சென்டி மீட்டர், செய்யூரில் 13 சென்டிமீட்டர், மதுராந்தகத்தில் 12 சென்டிமீட்டர் என சில இடங்களில் மிக அதிக அளவு மழை பெய்துள்ளது - இதன் காரணமாக மழைவெள்ள பாதிப்புகளுக்கு உள்ளாகக் கூடிய மாவட்டங்களில், முன்னெச்சரிக்கை நடவடிக்கை, நிவாரணம் மற்றும் சீரமைப்புப் பணிகளை துரிதப்படுத்த மூத்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் கடந்த மாதம் 29-ம் தேதியன்றே மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர் என முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.

இந்திய வானிலை ஆராய்ச்சி நிலைய அறிக்கையில் இன்றும், நாளையும் தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில் கனமழை மற்றும் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது - இந்த தொடர் மழை காரணமாக எடுக்கப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரணம் மற்றும் சீரமைப்புப் பணிகள் ஆகியவற்றை இன்று, தலைமைச் செயலகத்தில் அமைச்சர் பெருமக்கள் மற்றும் அரசு அதிகாரிகளுடன் தாம் ஆய்வு செய்தாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

தாம் ஏற்கெனவே உத்தரவிட்டதன் அடிப்படையில், தற்போது பெய்து வரும் கனமழையில் இருந்து மக்களைப் பாதுகாப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர் - ஏரிகளிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்படுவதாலும், தாழ்வான பகுதிகளில் மழை நீர் சூழ வாய்ப்புள்ளதன் காரணமாகவும், மழை நீர் சூழும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் - மேலும், மழை நீர் சூழ வாய்ப்புள்ள பகுதிகளில் காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படைகள், கடலோர பாதுகாப்புப் படை ஆகியோர் தேவைக்கேற்ப பாதிக்கப்படும் மக்களை படகுகள் மூலம் மீட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க தயார் நிலையில் உள்ளனர் - பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்படும் மக்களுக்கு உணவு, பாதுகாப்பான குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட இதர வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன - மேலும், பொது மக்களுக்குத் தேவையான மருத்துவ முகாம்களை தொடர்ந்து நடத்தவும், நிலவேம்பு குடிநீர் வழங்கவும் தாம் ஆணையிட்டுள்ளதாக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

நேற்று இரவு முதல் அதிகமாக மழை பெய்து வரும் சென்னை, திருவள்ளூர், கடலூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் நிவாரணம் மற்றும் சீரமைப்புப் பணிகளை அமைச்சர்கள் மேற்பார்வையிட தாம் ஆணையிட்டுள்ளதாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, திருவள்ளூர் மாவட்டத்தில் நிதி மற்றும் பொதுப் பணித்துறை அமைச்சர் திரு. ஓ. பன்னீர்செல்வம், நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி, பால்வளம் மற்றும் பால்பண்ணை வளர்ச்சித் துறை அமைச்சர் திரு. B.V. ரமணா மற்றும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலன் துறை அமைச்சர் திரு. எஸ்.அப்துல் ரஹீம் ஆகியோர் நிவாரணம் மற்றும் சீரமைப்புப் பணிகளை மேற்பார்வையிட்டு அதிகாரிகளுக்கு தக்க அறிவுரை வழங்குவார்கள்;

காஞ்சிபுரம் மாவட்டத்தில், குறிப்பாக தாம்பரம் முடிச்சூர் பகுதிகளில், உயர்கல்வித் துறை அமைச்சர் திரு.P. பழனியப்பன், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் திரு. S.P. வேலுமணி, தொழில் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் திரு.P. தங்கமணி மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் திரு. T.K.M.சின்னையா ஆகியோர் நிவாரணம் மற்றும் சீரமைப்புப் பணிகளை மேற்பார்வையிட்டு அதிகாரிகளுக்கு தக்க அறிவுரை வழங்குவார்கள்;

சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் திரு நத்தம் ஆர். விசுவநாதன், வீட்டுவசதி மற்றும் வேளாண்மைத் துறை அமைச்சர் திரு ஆர். வைத்திலிங்கம், சமூக நலன் மற்றும் சத்துணவு திட்டத் துறை அமைச்சர் திருமதி பா.வளர்மதி மற்றும் கைத்தறி, துணிநூல் துறை அமைச்சர் திருமதி எஸ்.கோகுல இந்திரா ஆகியோர் நிவாரணம் மற்றும் சீரமைப்புப் பணிகளை மேற்பார்வையிட்டு அதிகாரிகளுக்கு தக்க அறிவுரை வழங்குவார்கள்;

கடலூர் மாவட்டத்தில் வணிக வரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் திரு. எம்.சி.சம்பத் மற்றும் வருவாய்த் துறை அமைச்சர் திரு.R.B. உதயகுமார் ஆகியோர் நிவாரணம் மற்றும் சீரமைப்பு பணிகளை மேற்பார்வையிட்டு அதிகாரிகளுக்கு தக்க அறிவுரை வழங்குவார்கள் என முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

பெருமழையின் காரணமாக மின்கம்பிகள் அறுந்து விழுவதை தடுக்கும் பொருட்டு தமிழ்நாடு மின்வாரியம் மின் கம்பங்கள் மற்றும் மின் வழித்தடங்களை முழுமையாக ஆய்வு செய்து பாதுகாப்பை உறுதி செய்யுமாறு தாம் உத்தரவிட்டுள்ளதாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

தாம்பரம் அரசு மருத்துவமனையின் அருகிலுள்ள பகுதிகளிலிருந்து வெளியேறும் உபரி மழை நீர் மருத்துவமனையின் அடித்தளத்தில் புகுந்துள்ளது - எனவே, அங்கு சிகிச்சை பெற்று வரும் உள்நோயாளிகளை உடனடியாக 108 - அவசர ஊர்திகளைப் பயன்படுத்தி இதர அரசு மருத்துவமனைகளுக்கு கொண்டு சென்று தக்க சிகிச்சையை தொடர்ந்து அளித்திட தாம் ஆணையிட்டுள்ளதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

மாநிலத்தில் பல மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பள்ளிகளுக்கு பல நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது - எனவே, வரும் 7-ம் தேதி முதல், நடக்கவிருந்த அரையாண்டுத் தேர்வுகளை ஒத்தி வைத்திட தாம் உத்தரவிட்டுள்ளதாகவும், இந்த தேர்வுகள் வரும் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் நடத்தப்படும் என்றும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக சென்னை மாநகருக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, சோழவரம், புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஆகிய நீர்த் தேக்கங்களில் மொத்த கொள்ளளவில் 83 புள்ளி 8 சதவீதம் நிரம்பியுள்ளது - ஏரிகளின் பாதுகாப்புக் கருதி உபரி நீர் திறந்து விடப்படுகிறது - மேலும், தமிழகத்தில் பொதுப் பணித் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள 89 பெரிய நீர்த் தேக்கங்களில் 45 நீர்த் தேக்கங்கள் நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது - தமிழகத்தில் பொதுப் பணித் துறையின் கீழ் உள்ள 14,098 ஏரிகளில் 6,971 ஏரிகள் நிரம்பியுள்ளன - நீர்த் தேக்கங்கள் மற்றும் ஏரிகளிலிருந்து உபரி நீர் திறந்து விடப்படும் போது, தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு, தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்குமாறும், அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்குமாறும் தாம், அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00