தி.மு.க. தலைவர் கருணாநிதி, மற்றவர்களுக்கு எதிரான அஸ்திரமாக வளர்த்துவிட்ட மகன் மு.க.ஸ்டாலின், தற்போது அவரையே ஓரம்கட்டும் வகையில் பூமராங் ஆனகதையை பிரபல தமிழ் நாளிதழ் அம்பலப்படுத்தியுள்ளது. அது, தி.மு.க.வில் உள்ள கருணாநிதி ஆதரவாளர்களை கதிகலங்க வைத்துள்ளது.
பாரத ரத்னா எம்.ஜி.ஆர்., தமிழக முதலமைச்சராக கோலோச்சியபோது, அரசியலில் இருந்து ஓரம் கட்டப்பட்ட கருணாநிதி, கட்சியில் தனக்கு பாதுகாப்பைக் கருதி, 1980-களில் தனது மகன் மு.க.ஸ்டாலினுக்கு தி.மு.க. இளைஞர் அணிச் செயலாளர் பொறுப்பு வழங்கினார். மற்ற துணை அமைப்புகளை டம்மியாக வைத்திருந்த கருணாநிதி, இளைஞர் அணிக்கு கட்சித் தலைமையகமான அன்பகத்தை தாரைவார்த்து, ஸ்டாலினை கட்சித் தலைவர்களின் வரிசைக்குள் கொண்டுவந்தார். எனக்கு பின்னால் என் மகன்;
அவனுக்குப் பின்னால் அவனது மகன் என்று பட்டத்திற்கு வருவதற்கு, திராவிட முன்னேற்றக் கழகம் ஒன்றும் சங்கரமடம் அல்ல என்று சொன்ன கருணாநிதி, தனது மகன் மு.க.ஸ்டாலினுக்கு பட்டம் சூட்டுவதற்காக ஒவ்வொரு கட்டமாக படாதபாடுபட்டார் - கட்சியில் முக்கிய தலைவராக வளர்ந்து வந்த வைகோவை துரத்திவிட்டு, மகன் மு.க.ஸ்டாலினை தி.மு.க.வின் துணைப் பொதுச் செயலாளர், பிறகு பொருளாளர் என்று ஆக்கிய கருணாநிதி, அன்பழகன், ஆற்காடு வீராசாமி போன்றவர்களை பின்னுக்குத் தள்ளிவிட்டு மு.க.ஸ்டாலினை அமைச்சர், துணை முதலமைச்சர் என பதவிப் படிகளில் ஏற்றி வைத்தார்.
ஸ்டாலினுக்காக, குடும்பத்தில் அழகிரி, கனிமொழி ஆகியோரையெல்லாம் கருணாநிதி 2-ம் பட்சமாக வைத்திருக்கும் நிலையில், அந்த சூழ்நிலையைப் பயன்படுத்திக்கொண்ட மு.க.ஸ்டாலின், கருணாநிதிக்கு வயதானதைக் காரணம்காட்டி அவரை வீட்டில் உட்கார வைத்துவிட்டு, நமக்கு நாமே என ஊர்சுற்றி தனக்குத்தானே ஆதரவு திரட்ட தொடங்கினார். மேலும் மு.க.ஸ்டாலின், மனைவி துர்காவுடன், கேரளா சென்று அங்குள்ள பிரபல ஜோதிடர்களை சந்தித்து, யாகம் நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தினச் செய்தி தகவல் தெரிவித்துள்ளது. இதுகண்ட கருணாநிதி, உள்ளுக்குள் பொறுமத் தொடங்கியுள்ள நிலையில், ஸ்டாலினையே முதல்வர் வேட்பாளராக அறிவித்து வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்குமாறு கோபாலபுரக் குடும்பத்தினர் சொல்லத் தொடங்கியுள்ளதாக தினச் செய்தி தெரிவித்துள்ளது.
எந்த நிலைமையிலும் கட்சித் தலைவர் பதவியை, விடாமல் பற்றிக் கொண்டிருந்த கருணாநிதி, தான் ஏவிய ஸ்டாலின் எனும் அஸ்திரம் பூமராங்காகத் திரும்பிவந்து தன்னையே தாக்கும் என நினைத்திருக்கமாட்டார் என தினச் செய்தி சுட்டிக்காட்டியுள்ளது. இந்தச் செய்தி தி.மு.க.வில் உள்ள கருணாநிதி ஆதரவாளர்களை கதிகலங்க வைத்துள்ளது.