தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வுநிலை, மேற்கு நோக்கி நகர்ந்து தற்போது இலங்கை மற்றும் வடதமிழகத்தை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு நிலையாக நீடிப்பதால், வரும் 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதைத் தொடர்ந்து, சென்னை மாநகர் மற்றும் புறநகரின் பல்வேறு பகுதிகளில் இன்றும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் தண்ணீர் அளவு அதிகரித்துள்ளதால், உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. இதனால், அடையாறு கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில், திருத்தணி, பள்ளிப்பட்டு, பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, அம்பத்தூர், ஆவடி, மதுரவாயில், சோழவரம், செங்குன்றம் உட்பட அனைத்துப் பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. சென்னை நகருக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளான பூண்டி ஏரி, செம்பரம்பாக்கம் ஏரி, புழல் ஏரிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள், பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்தில், விழுப்புரம், உளுந்தூர்பேட்டை, திண்டிவனம், செஞ்சி, வானூர், திருக்கோவிலூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் 2-வது நாளாக கனமழை பெய்து வருகிறது. அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கடலூர் மாவட்டத்தில், பண்ருட்டி, நெய்வேலி, விருத்தாச்சலம், திட்டக்குடி, சேத்தியாதோப்பு உள்ளிட்ட பகுதிகளில் நேற்றிரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தாழ்வான பகுதிகளில் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம், தண்டராம்பட்டு, செய்யாறு, ஆரணி உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் இன்று மழை பெய்து வருகிறது.
நெல்லை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழையால், மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகளும் வேகமாக நிரம்பி வருகின்றன.
புதுச்சேரியில் காரைக்கால் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும், இரவு முதல் அடைமழை பெய்து வருகிறது.
இந்நிலையில், வரும் 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை நீடிக்கும் என்றும், கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழை மற்றும் மிக கனமழை பெய்யும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை நடைபெறவிருந்த சென்னை பல்கலைக்கழகத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன்கீழ் செயல்படும் கல்லூரிகளில் இன்று நடைபெறவிருந்த தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. அனைத்து அரசு சட்டக் கல்லூரிகளிலும், சீர்மிகு சட்டப்பள்ளியிலும் இன்றும், நாளையும் நடைபெறவிருந்த தேர்வுகள் மழை காரணமாக, ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இந்தத் தேர்வுகளுக்கான தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும்.