முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவின்பேரில், நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பல்லக்காபாளையத்தில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் மற்றும் திறன்மேம்பாட்டு பயிற்சி முகாம் இன்று நடைபெற்று வருகிறது. இந்த முகாமில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்றுள்ளனர்.
முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா உத்தரவின்பேரில், இளைஞர்கள் பெருமளவில் தனியார் துறையில் வேலைவாய்ப்பு பெறும் வகையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், சென்னை டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் கடந்த மாதம் 17-ம் தேதி மாபெரும் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. தமிழக அரசின் தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத் துறையும், சென்னை மாவட்ட நிர்வாகமும் இணைந்து நடத்திய இந்த முகாமில், சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களை சேர்ந்த, 300-க்கும் மேற்பட்ட முன்னணி தொழில் நிறுவனங்கள் பங்கேற்றன. தேர்வு செய்யப்பட்ட 17,095 பேருக்கு, பணிநியமன ஆணைகள் வழங்கும் அடையாளமாக, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 5 பேருக்கு பணிநியமன ஆணைகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
இதன் தொடர்ச்சியாக நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பல்லக்காபாளையத்தில் உள்ள விவேகானந்தா மகளிர் கலை, அறிவியல் கல்லூரி வளாகத்தில் இன்று காலை மாபெரும் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் தொடங்கியது. இதனை, அமைச்சர் திரு.P. தங்கமணி குத்துவிளக்கேற்றி துவக்கிவைத்தார்.
இந்த வேலை வாய்ப்பு முகாமில், சென்னை, கோவை, திருப்பூர், ஈரோடு, திருச்சி, ஓசூர், மதுரை போன்ற பல்வேறு மாவட்டங்களிலிருந்து 250-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. 5-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்தவர்கள், ITI, டிப்ளமோs, பட்டதாரி, B.E., மருத்துவம் என பல்வேறு தரப்பினர் சுமார் ஒரு லட்சம் பேர் இந்த முகாமில் பங்கேற்றுள்ளனர்.
வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்பவர்கள் வந்து செல்ல வசதியாக பேருந்து வசதி, தேவையான குடிநீர், உணவு, ஓய்வு அறை போன்றவற்றை முறையாக செய்து தரப்பட்டுள்ளது. மேலும், இந்த முகாமில் மாணவர்களின் திறனை வளர்ப்பதற்கான சிறப்பு பயிற்சியும் துறை வல்லுநர்களால் அளிக்கப்படுகிறது.