தமிழகத்தில் கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவின்பேரில், போர்க்கால அடிப்படையில் நிவாரணம் மற்றும் சீரமைப்புப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதால், வேகமாக இயல்பு நிலை திரும்பியுள்ளது.
சென்னை சைதாப்பேட்டை பஜார் சாலையில் உள்ள உருது பெண்கள் தொடக்கப்பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ள 300 பேருக்கு அமைச்சர்கள் திருமதி பா.வளர்மதி, திரு.S.P. வேலுமணி, திருமதி கோகுல இந்திரா ஆகியோர் காலை உணவு வழங்கினர். இதனைத்தொடர்ந்து, சென்னை மாநகராட்சி பொது சுகாதாரத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு மருத்துவ முகாமை அமைச்சர்கள் தொடங்கி வைத்து, பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கினர். இதன்பின்னர், அப்பகுதியில் கனமழையால் சேதமடைந்த சாலைகளை சீரமைக்கும் பணிகளை அமைச்சர்கள் பார்வையிட்டு துரிதப்படுத்தினர்.
பின்னர், சென்னை சைதாப்பேட்டை மாதிரி மேல்நிலைப் பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ள ஆயிரத்து 46 குடும்பங்களை சேர்ந்த 2,924 பேருக்கு அமைச்சர்கள் காலை உணவு வழங்கியதோடு, நிவாரணப் பொருட்களையும் வழங்கினர். அங்கு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் திரு.S.P. வேலுமணி, Cold Mix என்ற புதிய தொழில்நுட்பம் மூலம், சேதமடைந்த சாலைகள் சீரமைக்கப்பட்டு வருவதாகவும், வரும் நாட்களில் மழைச் சேதங்களை தவிர்ப்பதற்கான அனைத்து முன்னேற்பாடு நடவடிக்கைகளும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவின்படி மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
சென்னை ஆயிரம் விளக்கு மக்கீஸ்கார்டன் பகுதியில் பொதுமக்களுக்கு காய்ச்சல் மற்றும் தொற்றுநோய் பரவாமல் தடுக்கும் வகையில் சிறப்பு முகாம் நடைபெற்றது. இதனை அமைச்சர் திருமதி.பா.வளர்மதி தொடங்கிவைத்தார். நிலவேம்பு குடிநீரும் இம்முகாமில் வழங்கப்படுகிறது.
சென்னை சேப்பாக்கம், திருவல்லிக்கேணி பகுதியில் அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றம் சார்பில் சார்பில், கூவம் ஆற்றின் கரையோர பகுதி மக்களுக்கு மதிய உணவு, போர்வை, பாய் ஆகியவை வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் அமைச்சர் திருமதி.வளர்மதி மற்றும் அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் திரு.தமிழ்மகன் உசேன் மற்றும் அ.இ.அ.தி.மு.க நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இதேபோல் சென்னை கஸ்தூரிபாகாந்தி தாய்-சேய் நல மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்கள் மற்றும் சிகிச்சைக்கு வரும் பெண்களுக்கு மழைக்கால தொற்றுநோய் தடுப்பு மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது. அவர்களுக்கு நிலவேம்பு குடிநீரும் அளிக்கப்படுகிறது.
அமைந்தகரை பகுதிக்கு உட்பட்ட மேல்நடுவாங்கரையில் மழையால் வீடுகள் சேதமடைந்து, பாதிக்கப்பட்ட 27 குடும்பங்களுக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் மற்றும் அரிசி, உணவு போன்றவற்றை அமைச்சர்கள் திரு.எஸ்.பி.வேலுமணி, திருமதி.கோகுலஇந்திரா ஆகியோர் வழங்கினர்.
மதுரை மாவட்டத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வைகையாற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்த மேலக்கால் கிராமத்தைச் சேர்ந்த குருஜெய பிரகாஷ் என்ற மாணவரின் குடும்பத்தினரை, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவுப்படி, அமைச்சர் திரு. செல்லூர் கே. ராஜு நேரில் சந்தித்து, 4 லட்சம் ரூபாய்க்கான நிதியுதவியை குருஜெய பிரகாஷின் தந்தை திரு. வீரக்குமாரிடம் வழங்கி ஆறுதல் கூறினார். நிதியுதவியை பெற்றுக்கொண்ட திரு. வீரக்குமார், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு நெஞ்சம் நெகிழ நன்றி தெரிவித்துக் கொண்டார்.
தூத்துக்குடியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் உத்தரவுக்கிணங்க, மேற்கொள்ளப்பட்ட போர்க்கால நடவடிக்கை காரணமாக இயல்பு நிலை திரும்பியுள்ளது. மேலும், ராஜபாண்டி நகர், பால்பாண்டி நகர், P.N.T காலனி, மில்லர்புரம் போன்ற பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட சக்திவாய்ந்த மோட்டார் பம்ப்புகள் மூலம் வெள்ள நீரை அகற்றும் பணி இரவு பகலாக நடைபெற்று வருகிறது.
வேலூர் மாவட்டம் கொண்டசமுத்திரம் அடுத்த காளியம்மன்பட்டி பகுதியில் முதலமைச்சரின் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. ஏராளமான பொதுமக்கள் முகாமில் பங்கேற்று மருத்துவ சிகிச்சை மற்றும் ஆலோசனை பெற்றனர்.
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகேயுள்ள குருக்கள்பட்டி, வன்னிகோனந்தல் ஆகிய பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் காய்ச்சல் மற்றும் தொற்றுநோயை தடுக்கும் வகையில், பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அரசு மருத்துவமனையில் நடைபெற்ற மழைக்கால சிறப்பு சித்த மருத்துவ முகாமில் பங்கேற்ற பொதுமக்களுக்கும், நோயாளிகளுக்கும் நிலவேம்பு குடிநீர் விநியோகிக்கப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டம் பல்லாவரம் அரசு பொது மருத்துவமனையில், கனமழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட குன்றத்தூர், பரணிபுத்தூர், படப்பை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழையால் வீடுகள் சேதமடைந்த 750 பேரின் குடும்பங்களுக்கு 30 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம் மாதவரம் மற்றும் பொன்னேரியில் நடைபெற்ற மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்களில் பங்கேற்ற பொதுமக்களை, மருத்துவர்கள் உடல் பரிசோதனை செய்து அவர்களுக்கு தேவையான மருந்து மாத்திரைகளை வழங்கினர். மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரொட்டி உள்ளிட்ட உணவுப் பொருட்களும் வழங்கப்பட்டன.