தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் மூழ்கியும், வீட்டின் சுவர் இடிந்து விழுந்தும், நீரில் அடித்துச்செல்லப்பட்டும் உயிரிழந்த 8 பேரின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 4 லட்சம் ரூபாய் நிதியுதவி உடனடியாக வழங்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் பெய்த வடகிழக்குப் பருவமழையின் காரணமாக கடந்த 18-ம் தேதி சென்னை, அமைந்தகரை வட்டம், அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த திரு பலராமன் என்பவரின் மகள் பட்டம்மாள்;
கடந்த 19-ம் தேதி சென்னை, மாம்பலம் வட்டம், மேற்கு ஜாபர்கான் பேட்டையைச் சேர்ந்த திரு முத்துராமன் என்பவரின் மகன் திருமுருகன் என்கிற லோகேஷ்;
கடந்த 22-ம் தேதி காஞ்சிபுரம் மாவட்டம், திருப்போரூர் வட்டம், தையூர் கிராமத்தைச் சேர்ந்த திரு ரமேஷ் என்பவரின் மகன் அரிகிருஷ்ணன்;
கடந்த 23-ம் தேதி சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், அரசிராமணி கிராமத்தைச் சேர்ந்த திரு ராமசாமி என்பவரின் மகன் பெருமாள்;
கடந்த 24-ம் தேதி காஞ்சிபுரம் மாவட்டம், திருக்கழுக்குன்றம் "அ" கிராமத்தைச் சேர்ந்த திரு மாயாண்டி என்பவரின் மகன் சேகர்;
வேலூர் மாவட்டம், ஆற்காடு வட்டம், பாலி கிராமத்தைச் சேர்ந்த திரு கணபதி என்பவரின் மகன் சிதம்பரம் ஆகியோர் வெள்ளப் பெருக்கின் காரணமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற செய்தியையும்;
கடந்த 24-ம் தேதி காஞ்சிபுரம் மாவட்டம், திருக்கழுக்குன்றம் வட்டம், நெய்குப்பி கிராமத்தைச் சேர்ந்த திரு ஏழுமலை என்பவரின் மகன் சிவக்குமார் கன மழையின் காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற செய்தியையும்;
நேற்று முன்தினம் காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூர் வட்டம், கிளாய் கிராமத்தைச் சேர்ந்த திரு. வினோத் என்பவரின் குழந்தை சஞ்சனா கால்வாயில் விழுந்ததில் நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தாள் என்ற செய்தியையும் அறிந்து தாம் மிகவும் துயரம் அடைந்ததாக தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் சமீபத்தில் பெய்த கன மழையின் காரணமாக பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த இந்த 8 நபர்களின் குடும்பங்களுக்கு தமது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா நான்கு லட்சம் ரூபாய் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து உடனடியாக வழங்க தாம் உத்தரவிட்டுள்ளதாக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.