தஞ்சை மாவட்டத்தில், உலக தன்னார்வ ரத்ததான தினத்தையொட்டி, நடைபெற்ற விழிப்புணர்வுப் பேரணியில், பள்ளி- கல்லூரி மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் கலந்துகொண்டனர்.
உலக ரத்ததான தினத்தையொட்டி, தஞ்சை மாவட்டத்தில் நடைபெற்ற விழிப்புணர்வுப் பேரணியை மாவட்ட ஆட்சியர் திரு. டாக்டர் என். சுப்பையன், கொடியசைத்து தொடங்கி வைத்தார். பொதுமக்களுக்கு ரத்ததானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், வாசங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு, பள்ளி- கல்லூரி மாணவ-மாணவிகள் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக பேரணியாகச் சென்றனர்.
இதனிடையே, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் நகராட்சி சார்பில், பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து, விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. பேரணியில், 500-க்கும் மேற்பட்ட கல்லூரி, மாணவ- மாணவிகள் கலந்துகொண்டனர். நகரின் முக்கிய வீதிகளின் வழியாகச்சென்ற இப்பேரணி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிறைவடைந்தது.
ஈரோடு மாவட்டத்தில், வன உயிரின வாரவிழாவையொட்டி, இருச்சக்கர வாகனப் பேரணி நடைபெற்றது. வன உயிரினங்களை பாதுகாப்பது குறித்து, வ.உ.சி. பூங்காவில் தொடங்கிய இப்பேரணி, தாளவாடி புலிகள் காப்பகத்தில் முடிவடைந்தது.
இதனிடையே, புதுக்கோட்டை மாவட்டம் கீழ ராஜவீதியில், வாக்களிப்பதன் அவசியம் குறித்து நடைபெற்ற விழிப்புணர்வுப் பேரணியில், அரசு அலுவலர்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
காஞ்சிபுரத்தில் வன உயிரினங்களை பாதுகாப்பதன் அவசியத்தை வலியுறுத்தி, 300-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ - மாணவியர் பங்கேற்ற விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. இதில், வனத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.