முதலமைச்சர் ஜெயலலிதா ஆணையின்படி தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது
Oct 8 2015 10:14AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா ஆணையின்படி, தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்த கலந்தாய்வுக் கூட்டம், சென்னையில் இன்று நடைபெற்றது. புதிய கிடங்குகளில் கட்டுமானப் பணிகள் அனைத்தும் விரைந்து முடிக்கப்பட வேண்டும் என இக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
தமிழ்நாட்டில் உணவு உற்பத்தியை பெருக்கவும், கிடங்குகள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, உணவு தானியங்களை பாதுகாப்பாக சேமித்து வைத்து பொதுமக்களுக்கு உரிய தரத்துடன் விநியோகம் செய்யவும் முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா பிறப்பித்த உத்தரவின்படி, கடந்த 2011-ம் ஆண்டு முதல் இன்றுவரை தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனத்தில் 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 68 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 16 சேமிப்பு கிடங்குகள் கட்டிமுடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. மேலும், நாகை, ராமநாதபுரம், திருநெல்வேலி உள்ளிட்ட 7 இடங்களில் 69 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 72 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 15 கிடங்குகள் தற்போது கட்டப்பட்டு வருகின்றன. மேலும், 10 கிடங்குகள் கட்டுவதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்த கலந்தாய்வு கூட்டம், சென்னையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு தலைமை வகித்த உணவு, இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் திரு. ஆர். காமராஜ், அனைத்து கட்டுமானப் பணிகளையும் விரைந்து முடித்து, கிடங்குகளை பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என அதிகாரிகளை கேட்டுக்கொண்டார். இக்கூட்டத்தில், உணவுத்துறை முதன்மைச் செயலாளர் திரு. சிவ்தாஸ் மீனா, சேமிப்பு கிடங்குகள் நிறுவன நிர்வாக இயக்குநர் திரு. கே. நாகராஜன் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.